கொங்கு ஈஸ்வரனின் பொறுமையை சோதித்து பார்க்கும் அரசு அலுவலர்கள்! எல்லாமே மந்த கதியில்! பின்னணி என்ன?
நாமக்கல்: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கொங்கு ஈஸ்வரனின் பொறுமையை சோதித்து பார்க்கும் வகையில் அரசு அலுவலர்கள் சிலரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
முதற்கட்டமாக அவர்களுக்கு புத்திமதி கூறும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஈஸ்வரன் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

கோப்புகள் கிடப்பில்
''திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட ஒரு சில அலுவலக அலுவலர்கள் மற்றும் தொகுதியில் இல்லாமல் மாவட்ட அளவில் இருக்கும் உரிய துறை அலுவலகத்தில் காலதாமதமாக கோப்புகள் கிடப்பில் உள்ளது தொடர்பாக எனது அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தங்களுக்கு கிடைக்கும் புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீது ஒப்புகை சீட்டு கொடுக்கவும், அரசு நிர்ணயத்துள்ள கால கெடுவுக்குள் சம்பந்தப்பட்ட மனு/கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.''

காலக்கெடுவுக்குள்
''மேலும், மனு/கோரிக்கையின் முன்னேற்ற அறிக்கையை உரிய விதிமுறைகள் படி உரிய காலத்திற்குள் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் உரியவர்களுக்கு பதில் அளிக்கவும். பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, புதிய ரேஷன் அட்டை, வாரிசு சான்று, ரேஷன் அட்டை பெயர் சேர்த்தல் நீக்கம், நில அளவை மற்றும் இ சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் ஆன்லைன் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை அரசு நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்துகொடுக்கவும்.''

கடமை -பொறுப்பு
''வரும் காலங்களில் கால தாமதமாக நடவடிக்கை எடுப்பதும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் மீண்டும் புகார் வரும் சமயத்தில் அந்த அரசுத்துறை அலுவலகங்களில் ஆவணங்கள் ஆய்வு செய்ய உள்ளேன். என்னதான் அரசாங்கம் பல நல்ல நல திட்ட உதவிகளை அறிவித்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசு அலுவலர்களுக்கு தான் உள்ளது.''

ஈஸ்வரன் புத்திமதி
''எனவே இதனை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அலுவலக அலுவலர்கள் தங்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் சாதாரண பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சரியான சேவையை செய்திட தாங்கள் உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications