நடுவானில்.. விமானத்தில் பெண் மீது போதையில் சிறுநீர் கழித்த நபர்.. 30 நாட்கள் விமானத்தில் பறக்க தடை
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பெண் பயணி மீது போதையில் சிறுநீர் கழித்த நபருக்கு 30 நாட்கள் விமானத்தில் பயணிக்க தடை விதித்து ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
மிகவும் அருவருத்தக்க, அத்துமீறலான ஒரு செயலை செய்தவருக்கு இதெல்லாம் ஒரு தண்டனையே இல்லை என பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல் நிலையத்திலும் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திடம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடிதமும் எழுதியுள்ளது.

பெண் மீது சிறுநீர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி 'ஏர் இந்தியா' விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபரும் பயணித்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து மது அருந்திக் கொண்டும், விமானத்தில் அங்கும் இங்கும் நடப்பதுமாக அந்தப் பயணி இருந்தார். இந்நிலையில், மதிய உணவு முடிந்ததும், பயணிகள் இளைப்பாறுவதற்காக விமானத்தில் இருந்து மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. அப்போது, அசந்து தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணி ஒருவர் மீது அந்த போதை ஆசாமி சிறுநீர் கழித்தார். மேலும், அந்தப் பெண்ணின் முகத்திற்கு நேராக தனது ஆணுறுப்பை காட்டிக் கொண்டே இருந்தார். இதையடுத்து, மற்ற பயணிகள் அவரை திட்ட தொடங்கியதால் அங்கிருந்து அவர் நகன்றார்.

எந்த நடவடிக்கையும் இல்லை
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் விமானக் குழு உறுப்பினர்களிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் யாரும் அந்த நபரை கண்டிக்கவோ, அவரை தனியாக அமர வைக்கவோ இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணை விமானத்திற்கு பின்னால் இருந்த ஒரு குறுகலான சீட்டில் அமர வைத்தனர். விமானத்தில் முதல் வகுப்பில் இருக்கைகள் காலியாக இருந்தும் அவரை அங்கு விமானக் குழுவினர் அமர வைக்கவில்லை. மேலும், அந்த நபர் மீது பாதுகாப்பு அதிகாரிகளிடமும் விமானக் குழுவினர் புகார் அளிக்காததால், இத்தனை அட்டுழியங்களை செய்த அந்த நபர் எந்தவித தண்டனைக்கும் உள்ளாகாமல் சென்றுவட்டார்.

டாடா குழுமத் தலைவருக்கு கடிதம்
விமானக் குழுவினரின் அலட்சியத்தை கண்டு வெறுத்து போன அந்தப் பெண், தனது நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து டாடா குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு தனியாக புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர், "விமானத்தில் போதையில் இருந்த நபர் என் மீது சிறுநீர் கழித்தார். மேலும், ஆடையை சரிசெய்யாமல் ஆபாசமாகவும் நின்றுக் கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் அவரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை கொடுத்தனர். வேறு இருக்கையும் கொடுத்தனர். ஆனால், விமானம் தரையிறங்கிய பின்னர், அந்த நபர் எதுவும் நடக்காது போல இறங்கி சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் அலட்சியமாக நடந்து கொண்டனர்" எனக் கூறியிருந்தார்.

30 நாள் தடை
இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் ஒரு மாதத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications