அடேங்கப்பா.. பூமியில் இருப்பதை விட பெரிய கடல்! வியாழன் கோள் நிலவில்.. கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!
நியூயார்க்: பூமியில் இருப்பதை விட மிகப்பெரிய கடல், வியாழன் கோளை சுற்றி வரும் யுரோப்பா என்ற சந்திரனில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வியாழன் கோளை ஆராய்ச்சி செய்ய நாசா அனுப்பிய 'ஜூனோ' என்ற செயற்கைக்கோள் தான், இந்தக் கடலை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
வியாழன் கோள் தொடர்பான ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
வேறு பெண்ணுடன் திருமணமான பிறகும் இளம்பெண் மீது ஆசைப்பட்ட இளைஞர்.. சம்மதிக்காததால் தீ வைத்து எரிப்பு!
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கண்டுபிடிப்புகள்
பூமி மற்றும் கோள்கள் தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் அவ்வப்போது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை. செவ்வாய் கிரகத்தில் நதிகள் இருந்ததற்கான தடயங்களை கண்டுபிடித்தது; நிலவில் விவசாயம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்தது போன்ற ஆராய்ச்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். அதை விட முக்கியமாக, விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆராய்ச்சி நம் அனைவரையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதுதான், பூமிக்கு கீழே மிகப்பெரிய ராட்சதக் கடல் இருப்பதை கண்டுபிடித்த ஆராய்ச்சி. இவ்வாறு நம் பூமி உட்பட வேற்று கிரகங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து பல புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்து வருகின்றனர்.
ஜுனோ சாட்டிலைட்டின் புகைப்படங்கள்
அந்த வகையில், நமது சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் கோளை (ஜூபிடர்) மிக அருகே சென்று ஆராய்ச்சி செய்ய நாசா விண்வெளி ஆய்வு மையம் 'ஜூனோ' என்ற சாட்டிலைட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு அனுப்பியது. இந்த சாட்டிலைட், வியாழன் கோளை மிக அருகே சுற்றி வந்து, அதனை புகைப்படங்கள் எடுத்து நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருகிறது. அதன்படி, கடந்த வாரம் இந்த ஜுனோ சாட்டிலைட் அனுப்பி வைத்த புகைப்படம்தான் விஞ்ஞானிகளை பிரமிப்பில் தள்ளியது.
யுரோப்பா நிலவு
வியாழன் கோளை சுற்றி வரும் மிகப்பெரிய நிலவான யுரோப்பாவை மிக அருகே சென்று இந்த சாட்டிலைட் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. பூமிக்கு ஒரு நிலவு இருப்பதை போல, வியாழன் கோளை 69-க்கும் மேற்பட்ட நிலவுகள் சுற்றி வருகின்றன. இவற்றிலேயே பெரிய நிலவாக அறியப்படுவது யுரோப்பா தான். இந்நிலையில், இந்த நிலவில் பூமியில் உள்ளதை விட பெரிய அளவிலான கடல் இருப்பது, ஜுனோ சாட்டிலைட் அனுப்பிய புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
ஆர்ப்பரிக்கும் பெருங்கடல்
அதாவது, யுரோப்பா நிலவின் பெரும்பாலான இடங்களின் மேற்பரப்பில் பனி உறைந்து காணப்படுகிறது. சுமார் ஒரு மைல் ஆழத்துக்கு இந்த உறைபனி இருக்கிறது. அதற்கு அடியில் தான் இந்த ராட்சதப் பெருங்கடல் ஆர்ப்பரித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு வியாழன் கோள் தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் எனத் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இனி யுரோப்பா நிலவை ஆய்வு செய்வதற்காகவே ஒரு தனி சாட்டிலைட்டை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நாசா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.