48 நாள் நல்வாழ்வு முகாம் தொடங்கியது... இனி ருசியான உணவுதான், மசாஜ்தான்... யானைகள் குஷியோ குஷி!
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் யானைகள் நல்வாழ்வு முகாம் தொடங்கி உள்ளது.
இந்து அறநிலையத்துறை சார்பில் 48 நாட்கள் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு முகாமில் தமிழக கோவில் யானைகள், புதுவையின் 2 யானைகள் பங்கேற்றுள்ளன.
யானைகள் புத்துணர்வு முகாம்
தமிழகம் முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளின் உடல் மற்றும் மனம் நலம் பெற தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இந்த ஆண்டு யானைகளுக்கான புத்துணர்வு முகாமை 48 நாட்கள் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து கடந்த 25-ந் தேதி உத்தரவிட்டது.
நடைபயிற்சி, சிறப்பு உணவு
இந்தநிலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் இன்று தொடங்கி உள்ளது. இந்த முகாமில் யானைகளின் எடைக்கு ஏற்ப உணவு அளிக்கப்படும். அதாவது சோறு, கம்பு, பாசிப்பயிறு, உப்பு, புல், வெல்லம், சூரணம் கலந்து உணவு ஊட்டப்படும். நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் யானைகள் எளிய நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்படும்.
யானைகளுக்கு மசாஜ் உண்டு
யானைகள் தசைகள் சிறப்பாக செயல்பட வைக்கும் வகையில் மசாஜ் செய்யப்படும். தினமும் சிறப்பு மருத்துவர்கள் யானைகளுக்கு பரிசோதனை நடத்துவார்கள். வழக்கமாக மக்கள் கூட்டத்தில் வசித்து வரும் யானைகள், இதுபோன்ற வனப்பகுதிகளில் இருப்பது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்.
48 யானைகள் பங்கேற்பு
இந்த ஆண்டு யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் 48 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு முகாமில் தமிழக கோயில் யானைகள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் பங்கேற்றுள்ளன.