சூடுபிடிக்கும் கொடநாடு எஸ்டேட் வழக்கு.. ஜெயலலிதா, சசிகலா அறையில் சிபிசிஐடி ஆய்வு.. பின்னணி என்ன?
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்கும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு அங்கு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீஸார் சயான், வாளையார் மனோஜ், சதீசன், தீபு, சந்தோஷ் சாமி, பிஜின், மனோஜ் சாமி, ஜித்தன் ஜாய், உதயகுமார், சதீஷ், ஜம்சீர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
அதிரடி.. இறுகும் கொடநாடு கொலை வழக்கு! களத்திற்கே வந்த சிபிசிஐடி டிஜிபி! எஸ்டேட் ஊழியர்களிடம் விசாரணை
சூடுபிடித்த வழக்கு
திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கு சூடுபிடித்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த வழக்கிற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மீண்டும் தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மறுவிசாரணையில் 316 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இவை அறிக்கையாகவும் நீலகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆதாரங்கள்
ஆனாலும் இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை. இதனால் இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸார் 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
சிபிசிஐடி
இதன் ஒரு நகல் சிபிசிஐடி போலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான போலீஸார் நேற்றைய தினம் கொடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிலரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. கொலையாளிகள் திட்டமிட்டு பங்களாவுக்கு நுழைந்த நுழைவாயில் பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஜெயலலிதா அறையில் ஆய்வு
இந்த ஆய்வின் போது முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக கூறப்படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறை சசிகலாவின் அறைகளில் ஆய்வு மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார் அந்த பகுதிகளை புகைப்படங்களால் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணை இன்றும் தொடரும் என தெரிகிறது. நாளை கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வருகிறது.