காஷ்மீர் எதுக்கு..ஊட்டியே அப்படித்தான் இருக்கு! உதகையில் தொடங்கிய உறைபனி..நடுங்க வைக்கும் குளிர்!
நீலகிரி : உதகையில் உறை பனி பொழிவு துவங்கியுள்ள நிலையில் மினி காஷ்மீர் போல் காட்சியளிப்பதால் கடும் குளிர் நிலவி வருகிறது, இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. மேலும் கடந்த 3 நாட்களாக பகலில் அதிக அளவில் வெயில் காணபட்ட நிலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
டிசம்பர் இறுதி ஜனவரி தொடக்கத்தில் பொதுவாக உலகம் முழுவதுமே குளிர்காலம் தான். தற்போது அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட உறைபனி புயலால் அப்பகுதி மக்களின் வாழ்வு வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இமாச்சலப் பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் உறைபனி தொடங்கி இருக்கும் நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தின் உயரமான பகுதியில் இருக்கும் உதகையிலும் உறைபனி சீசன் துவங்கி உள்ளது.
4 நாட்களுக்கு செம மழை.. பனி வருது மழை வராதுனு மூடநம்பிக்கையை தூக்கி போடுங்க.. வெதர்மேன் அப்டேட்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனி பொழிவு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு மழை தொடர்ந்து காணப்பட்டதால் உறைபனி பொழிவு டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கியது. மேலும் மீண்டும் மழை காணப்பட்டதால் உறை பனி பொழிவு காணப்படவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பகலில் அதிக அளவில் வெயில் காணப்பட்ட நிலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவுகிறது.
கடும் குளிர்
இதனால் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் உறைபனி பொழிவு துவங்கியுள்ளது. குறிப்பாக உதகை குதிரை பந்தய மைதானம், காந்தல், அரசு தாவரவியல் பூங்கா, தலை குந்தா ஆகிய பகுதிகளில் உறை பனி பொழிவு காணப்பட்டது. பசும் புல்வெளிகளில் வெள்ளை நிறத்தில் பனி பொழிவு காணப்பட்டதால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சியளித்தது. இதனால் உதகையில் இன்று பெய்த கடும் உறைபனி பொழிவால் கடுங்குளிர் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜீரோ டிகிரி செல்சியஸ்
மேலும் காலை நேரங்களில் 9 மணிக்கு மேல் நன்றாக வெயில் வந்தவுடன் வீட்டை விட்டு வெளியே வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உதகையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காணப்பட்டாலும் இரவு நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியல்சாக பதிவாகியுள்ளது மேலும் தாழ்வான இடங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்னும் குறையும்
இன்னும் வரும் நாட்களில் நகர்ப்புறங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகையில் நிலவி வரும் கடும் உறைபனி பொழிவு காரணமாக அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் மலைப் பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் தடகள பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் எண்ணிக்கை குறைந்த அளவே காணப்பட்டது. இருந்தாலும் சில விளையாட்டு வீரர்கள் ஸ்வட்டர், தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.
சுற்றுலாப் பயணிகள்
அதே நேரத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும் கடும் குளிர் சீசனை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும் உதகைக்கு வருகை தருகின்றனர். வழக்கம்போல் உதகையின் சாலைகள் வாகனங்கள் நிரம்பியும் சுற்றுலா தலங்களில் மனிதத் தலைகளாகவும் காணப்படுகிறது. பல இடங்களில் அதிகாலையிலேயே உறைபனியை ரசிக்க மக்கள் தயாராகி வருகின்றனர் .பகல் நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சுற்றுலாப் பயணிகள் கார்களில் உலா வருவதையும் காணமுடிந்தது.