2 உலகப்போர்கள்.. இன்ஃப்ளூயன்ஸா டூ கொரோனா வரை எல்லாம் பாத்தாச்சு.. 118 வயதில் உயிரிழந்த கன்னியாஸ்திரி
பாரிஸ்: பிளாஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் பிறந்த உலகின் மிக வயதான கன்னியாஸ்திரி தனது 118வது வயதில் இரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். பிரெஞ்சு கன்னியாஸ்திரியான இவர் இரண்டு உலக போர்கள், 5 கோடி மக்களை பலி கொண்ட இன்ஃப்ளூயன்ஸா நோய் மற்றும் இறுதியாக கொரோனா தொற்று ஆகியவற்றை கடந்து வாழ்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் வாழும் மக்களின் வாழ்க்கை நாட்கள் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வந்தாலும், அவ்வப்போது ஏற்படும் இயற்கை பேரிடராலும், போர்களாலும், நோய்தொற்றாலும் பலர் குறுகிய காலங்களிலேயே உயிரிழந்துவிடுகின்றனர். இந்த பிறப்பு இறப்புகளுக்கு மத்தியில் ஒரு சாதாரண குழந்தையாக 1904ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரான்சின் அலெஸில் புராட்டஸ்டன்ட் குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆண்ட்ரே.
இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே உலகின் மிக கொடிய நோயான இன்ஃப்ளூயன்ஸா பரவத் தொடங்கியது. இது உலகம் முழுவதும் சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்களை பலி வாங்கியது. பிரான்சில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தனர். ஆனால் இந்த தொற்று பாதிப்பிலிருந்து ஆண்ட்ரே மீண்டுவிட்டார். அதன் பின்னர் 26 வயதில் ஞானஸ்தானம் எடுத்து கத்தோலிக்க மதத்திற்கு மாறினார்.
திருப்பணி
ஒரு புறம் திருப்பணி, மறுபுறம் சொந்த வாழ்க்கை என நகர்ந்துக்கொண்டிருந்தது. சிறிது காலம் பாரிசில் ஆளுநராக பணியாற்றினார். என்ன இருந்தாலும் பணியில் இவருக்கு ஒரு சலிப்பு இருந்துக்கொண்டே இருந்துள்ளது. எனவே திருப்பணிகளில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கினர். இப்பணி இவருக்கு மிகுந்த மன அமைதியையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது. இவருடைய 46வது வயதில் இவருக்கு திருச்சபைப் பட்டம் கொடுக்கப்பட்டது. இது இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருபுமுனை. இந்த பட்டம் பெற்ற பின்னர் விச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்ற தொடங்கினார்.
மன உறுதி
சுமார் 30 ஆண்டுகாலம் ஆதரவற்றவர்களையும், போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்துக்கொண்டார். இப்பணியை இத்தனை ஆண்டுகாலம் செய்வதற்கு மிகப்பெரிய மன உறுதி தேவைப்படுகிறது. அந்த உறுதியை அவர் பெற்றிருந்தார் என அவருடன் பணி செய்தவர்கள் அப்போது கூறியிருந்தார்கள். கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது வாழ்நாளில் மொத்தம் 18 பிரெஞ்சு ஜனாதிபதிகள் மற்றும் 10 போப்களின் நிர்வாகத்தையும் கண்டிருக்கிறார். தன்னுடைய ஓய்வு நாட்களில் உலக போர் குறித்தும் அதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆண்ட்ரே துல்லியமான நினைவை கொண்டிருந்தார் என்று ஆண்ட்ரேவின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
போர்
அதேபோல 1954-62 அல்ஜீரியப் போரில் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த காட்சிகள் குறித்த நினைவுகளையும் இவர் மறக்கவில்லை. கடைசியாக தனது 118வது பிறந்த நாளை கொண்டாடியபோது "நான் இந்த உலகத்திற்கு வந்ததிலிருந்து, போர்களையும் சண்டைகளையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளை மட்டுமே பார்த்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், இந்த பாதிப்பிலிருந்தும் அவர் மீண்டு வந்தார். இவர் குடியிருந்த பகுதியில் ஏறத்தாழ அனைவரும் பாதிக்கப்பட்டனர். அதில் பலர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் இவர் மட்டும் உயிர் பிழைத்துவிட்டார்.
மறைவு
இந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவு குறித்து கின்னஸ் உலக சாதனைகளின் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளெண்டே கூறியதாவது, "பிளாஸ்டிக், ஜிப், ப்ரா உள்ளிவற்றிற்கு காப்புரிமை பெறுவதற்கு முன்னர் பிறந்த ஒருவர் 21ம் நூற்றாண்டு வரை உயிருடன் இருந்தார் என்பதை புரிந்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்" என்று கூறியுள்ளார். ஆண்ட்ரேவின் உறவினர்கள் கூறுகையில், அவர் உயிரிழப்பதற்கு முன்பு வரை கூட நல்ல ஆரோக்யமான உணவை எடுத்துக்கொண்டார். இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் மற்றும் கொஞ்சம் ஒயினையும் இவர் உணவில் சேர்த்துக்கொண்டார். இது கூட இவரது நீண்ட ஆயுளின் ரகசியமாக இருக்கலாம்" என்று கூறியுள்ளனர்.