மோடி அழைப்பு புறக்கணிப்பு - பீகாரில் ஆளும் கூட்டணியில் பிளவு: நிதீஷ் - பாஜக மோதலுக்கான 5 காரணங்கள்
பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் பாஜக இடையிலான கூட்டணியில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கான 5 முக்கிய காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அளித்த பிரிவு உபசார விழாவின்போது அளித்த விருந்தையும் நிதீஷ் குமார் புறக்கணித்தார்.
அதேபோல் அமித்ஷா நடத்திய முதலமைச்சர்கள் கூட்டத்திலும் நிதீஷ் குமார் பங்கேற்காமல் அமைச்சரையே அனுப்பி வைத்தார். ஒரே மாதத்தில் பிரதமரின் 2 நிகழ்ச்சிகளை கூட்டணி கட்சியை சேர்ந்த முதலமைச்சரே புறக்கணித்து இருப்பதற்கு விரிசலே காரணம் என்று கூறப்பட்டது. இதற்கான 5 முக்கிய காரணங்கள் இதோ...
ஒசூர் அருகே அரசு பேருந்து மோதல்... தலைக்குப்புற கவிழ்ந்த கார்... உயிர்தப்பிய 6 பேர்!
1. பீகார் சபாநாயகர்
பீகார் சட்டமன்ற சபாநாயகராக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா என்பவர் பதவி வகித்து வருகிறார். இவருக்கும் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு எதிராகவே சபாநாயகர் கேள்வி எழுப்பி அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை நீக்க வேண்டும் என நிதீஷ் குமார் பாஜகவை வலியுறுத்தினார்.
2. அமைச்சரவையில் இடம்
மத்தியில் ஆளும் பாஜக அரசிலும் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரே ஒரு மத்திய அமைச்சரவை பொறுப்பை மட்டுமே பாஜக வழங்கியதால் நிதீஷ் குமார் அதிருப்தி அடைந்தார். இதுகுறித்து அவர் வெளிப்படையாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலடி தரும் வகையில் பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது பாஜகவுக்கு 9ல் ஒரு இடத்தை மட்டுமே ஜேடியு வழங்கியது.
3. ஒரே நாடு ஒரே தேர்தல்
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எதிர்த்து வருகிறார். ஆனால், மத்திய அரசும் பாரதிய ஜனதா கட்சியும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இதன் காரணமாக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
4. அமித்ஷா VS நிதீஷ் குமார்
பீகார் அமைச்சரவையில் பாஜகவை சேர்ந்த யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதில் தன்னுடைய தலையீடும் இருக்க வேண்டும் என நிதீஷ் குமார் விரும்பியதாக கூறப்படுகிறது. இது பீகாரில் தனது ஆதிக்கத்தை குறைப்பதைபோல் இருப்பதாக அமித்ஷா கருதியதாக தெரிகிறது. இதன் காரணமாக நிதீஷ் குமார் ஆட்சியில் பல ஆண்டுகளாக துணை முதலமைச்சராக இருந்த பாஜகவின் சுஷில் மோடியை பீகார் அரசியலிலிருந்து கட்சி தலைமை வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5. ஆர்.சி.பி. சிங்
மத்திய அமைச்சரவையில் ஜேடியு அங்கம் வகிக்காது என நிதீஷ் தெரிவித்த நிலையில், அதை மீறி பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.சி.பி. சிங்கிற்கு கட்சித் தலைமையிடம் கருத்து கேட்காமல் மத்திய அமைச்சர் பதவி வழங்கியது பாஜக. இது நிதீஷ் குமாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆர்.சி.பி. சிங்கிற்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி வழங்க நிதீஷ் மறுத்ததால் அவரால் மத்திய அமைச்சராக நீடிக்க முடியவில்லை.