பீகார் சட்டசபை தேர்தலில் பரபர திருப்பம்: காங். கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் இணைந்தன
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் ஆகிய இடதுசாரிகள் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் இதனை கவனத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
வித்யாதன் ஸ்காலர்ஷிப் 2020: எஸ்எஸ்எல்சியில் 80% மார்க் வாங்கியவர்கள் உடனே விண்ணப்பிங்க
பாஜக ஜேடியூ கூட்டணி
பீகாரில் ஆளும் ஜேடியூ- பாஜக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரே முன்னிறுத்தப்பட்டுள்ளார். பாஜகவினரும் நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என ஏற்கனவே அமித்ஷா பிரகடனப்படுத்தி பிரசாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். இதனால் இந்த கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் சிக்கல் எதுவும் இல்லை.
காங். தலைமையில் மெகா கூட்டணி
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது என திட்டமிடப்பட்டது. காங்கிரஸ்- ஆர்ஜேடி கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவும் இடம்பெற்றிருந்தது.
காங். தலைமையில் இடதுசாரிகள்
ஆனால் திடீரென மஞ்சியின் கட்சி இந்த மெகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில் பீகாரில் புதிய திருப்பமாக காங்கிரஸ்- ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணியில் இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் ஆகியவை இணைந்துள்ளன.
இணையுமா சிபிஐ(எம்எல்)
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டணியில் போட்டியிடுவோம் என்று இடதுசாரித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். பீகாரில் சிபிஐ, சிஎபிம் கட்சிகளுக்கு ஒரு எம்.எல்.ஏக்கள் கூட இல்லை. ஆனால் சிபிஐ (எம்எல்) கட்சிக்கு 3 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதுவரை காங்கிரஸ்- இடதுசாரிகள் அணியில் சிபிஐ (எம்எல்) இணைவது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் கைகோர்த்திருக்கிறோம் என்கின்றனர் இடதுசாரிகள்.