பீகார்: பாஜக, ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் போராட்டம்.. சபாநாயகர் ராஜினாமா.. பரபரத்த பாட்னா!
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் சட்டசபை முன்பாக பாஜக, இடதுசாரி கட்சிகளின் எம்.எல்.ஏக்களின் போட்டி போட்டு போராட்டம் நடத்தினர்; ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்தும் அதை நிராகரித்து சட்டசபையில் சபாநாயகர் பதவியை முதலில் பாஜகவின் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுத்தார்; பின்னர் பதவியை ராஜினாமா செய்தார்.. இத்தகைய நிகழ்வுகளால் இன்று பாட்னா சட்டசபையில் பெரும் பரபரப்பு நிலவியது.
பீகாரில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பதவியேற்றார். பின்னர் அனைத்து கூட்டணிகளையும் அரவணைக்கும் விதமாக அமைச்சரவை அமைக்கப்பட்டு பதவியேற்பும் நடைபெற்றது. அப்போது ஜேடியூவின் சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சபாநாயகர் பதவியில் இருந்தவர் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா. ஜேடியூ-பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சித்தவர் விஜய்குமார் சின்ஹா என்கிற வி.கே.சின்ஹா. ஜேடியூ, பாஜக கூட்டணி பிளவுக்கும் கூட காரணமே இவர்தான் எனவும் கூறப்பட்டது. இதனால் விஜய்குமார் சின்ஹா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள்.
இந்த நிலையில் இன்று சட்டசபை காலை கூடியது. அதற்கு முன்னதாக திடீரென ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இட்ங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபைக்கு வந்த இடதுசாரி எம்.எல்.ஏக்கள் இந்த ரெய்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு போட்டியாக பாஜக எம்.எல்.ஏக்களும் சட்டசபை வளாகத்தில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இது தொடர்பான அத்தனைக்கும் சட்டசபையில் பதிலளிப்போம் என ஒற்றை வரியில் பதில் சொன்னார் தேஜஸ்வி யாதவ். அதேபோல், நிதிஷ்குமார் அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது; பாஜகவால் எங்களை மிரட்ட முடியாது என சவால்விட்டார் ராப்ரி தேவி.
இதன்பின்னர் சட்டசபை கூடிய போது, சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா, தமக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மாத்தை நிராகரிப்பதாக அறிவிக்க பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா தமது பதவியை ராஜினாமா செய்தார். ஒருவேளை விஜய்குமார் சின்ஹா தமது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து அடம்பிடித்து இருந்தால் அரசியல் குழப்பமும் அரசியல் சாசன சிக்கலும் எழுந்திருக்கும்.
ஒரு பக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு.. மறுபக்கம் சிபிஐ ரெய்டு! லாலு கட்சிக்கு மத்திய அரசு நெருக்கடி