நெட்டிசன்கள் நெகிழ்ச்சி.. இனி ஒற்றைக் காலில் குதித்து பள்ளி செல்ல வேண்டாம்- சிறுமிக்கு செயற்கை கால்!
பாட்னா : கல்வி கற்கும் ஆர்வத்தால் தினமும் ஒரு காலில் குதித்துக் குதித்து பள்ளிக்குச் சென்று வருகிறார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சீமா.
பீகாரின் ஜாமுய் மாவட்டத்தில் வசிக்கும் சீமா மான்ஜி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கி, ஒரு கால் பறிபோனது. காலை இழந்தாலும் அந்தச் சிறுமி நம்பிக்கையை இழக்கவில்லை.
அடுத்த 3 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. நீங்க எந்த ஊரு!
சீமாவின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பள்ளிக்கூடம் உள்ள நிலையில், தினமும் ஒற்றைக் காலால் குதித்து குதித்தே பள்ளிக்கூடம் சென்று வருகிறார் சீமா.
பரவிய வீடியோ
இன்றைய சமூக வலைதள உலகில், அவ்வப்போது சில வீடியோக்கள் அதீதமாகப் பரவி காண்பவர்களைக் கவர்ந்துவிடும். இன்னும் சில பார்க்கும் அத்தனை பேரையும் நெகிழவைத்து விடும். அப்படி ஒரு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் முதுகில் பள்ளிக்கூட பையை மாட்டிக் கொண்டு, ஒரு காலில் குதித்துக் குதித்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்தச் சிறுமி பற்றிய தகவல்கள்தான் நம்மை நெகிழச் செய்கின்றன.
பீகார் சிறுமி
இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள சிறுமி பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தைச் சேர்ந்த சீமா என்ற 10 வயது மாணவி. சீமாவின் தந்தை கிரண் மஞ்சி ஒரு புலம்பெயர்ந்து வேறு மாநிலத்தில்பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் செங்கல் சூளையில் வேலை செய்கிறார். இந்த சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் தனது ஒரு காலை இழந்துள்ளார். ஒரு காலை இழந்தாலும் குறையாத நம்பிக்கையாலும், கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு ஒற்றைக் காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வருகிறார்.
டெல்லி முதல்வர் பாராட்டு
சிறுமி சீமாவின் கல்வி ஆர்வத்தைப் பார்த்து அவரது பள்ளி ஆசிரியர்கள் மாணவி சீமாவிற்கு உதவியாக இருந்து வருகின்றனர்.
தடையை எதிர்த்துப் போராடி கல்வி கற்று வரும் மாணவி சீமாவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் மாணவிக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சோனு சூட் உறுதி
இந்த வீடியோ தீயாகப் பரவியதை அடுத்து, இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட். இதுபோன்ற பலருக்கு உதவி வரும் சோனு சூட், சிறுமி இனி இரண்டு கால்களில் பள்ளிக்கு நடந்து செல்வார் என்று கூறியுள்ளார். சோனு சூட், அச்சிறுமிக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு தனது அறக்கட்டளை மூலம் உதவுவார் எனக் கூறப்படுகிறது.
மூன்று சக்கர வாகனம்
இதற்கிடையே, அந்தச் சிறுமிக்கு உதவ பலரும் முன் வந்த நிலையில், ஜாமுய் மாவட்ட ஆட்சியர், சிறுமியின் வீட்டுக்கே வீட்டிற்கு சென்று, சிறுமி சீமாவுக்கு மூன்று சக்கர வண்டியை பரிசாக அளித்து பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார். மேலும், சிறுமிக்கு செயற்கை கால் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
செயற்கை கால்
இந்நிலையில், சிறுமி சீமாவுக்கு பீகார் மாநில கல்வித்துறை மூலமாக செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண், சிறுமி சீமா செயற்கை காலுடன் இருக்கும் படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளம் மூலம் சீமா குறித்த தகவல் பரவிய நிலையில், அவருக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.