எலுமிச்சை பறித்ததால் கோபம்.. மருமகளை அடித்துக் கொன்ற மாமியார்.. பீகாரில் கொடூரம்!
தோட்டத்தில் எலுமிச்சைப் பழத்தைப் பறித்ததற்காக மருமகளை மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.
பாட்னா: பீகாரில் தோட்டத்தில் எலுமிச்சைப் பழத்தைப் பறித்ததற்காக மருமகளை மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு சீசனிலும் சில காய்கறி மற்றும் பழங்களின் விலை உயர்வது வழக்கம்தான். அந்தவகையில் இந்தாண்டு இந்தியா முழுவதும் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக்கு ஒரு கிலோ 500 வரையிலும், ஒரு பழத்தின் விலை 10 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெயில் காலத்தில் ஜூஸ் போடுவதற்கு அதிகம் பயன்படும் எலுமிச்சையின் இந்த திடீர் விலையுயர்வு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எலுமிச்சை சாகுபடி செய்தவர்கள் தங்கத்தைப் போல் அதற்கு காவல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் எலுமிச்சை பழத்திற்காக ஒரு கொலை நடந்திருப்பது பீகாரில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
எலுமிச்சையால் பிரச்சினை
பிகார் மாநிலம் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள செயின்பூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த காஜல்தேவி, நேற்று தோட்டத்தில் இருந்து எலுமிச்சை பழத்தைப் பறித்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்து கொலை
அப்போது, நாத்தனார்கள் இருவரும் சேர்ந்து காஜல் தேவியுடன் சண்டையிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி காஜலை அவரது மாமியாரும், நாத்தனார்களும் சேர்ந்து அடித்துள்ளனர். அப்போதும் கோபம் தீராமல் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் தலைமறைவு
காஜலைக் கொலை செய்ததும் பயத்தில் மாமியாரும், நாத்தனார்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காஜலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
காஜலின் கணவர் மற்றும் மாமனார் வெளி மாநிலங்களில் பணிபுரிவதாகவும், சம்பவத்தின் போது அவர்கள் வீட்டில் இல்லை என்றும், முதற்கட்ட விசாரணையில் எலுமிச்சைப் பழத்திற்காகத்தான் கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். காஜல் எலுமிச்சம்பழத்தை திருட முயற்சித்தாரா அல்லது பழங்களை கேட்காமல் பறித்ததால் சண்டை நடந்ததா? என்பது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.