அருணாச்சல் ஆட்டத்துக்கு பீகாரில் பதிலடி?முதல்வர் பதவியை தூக்கி வீசத் தயாரான நிதிஷ்-பாஜக அரசு கதி?
பாட்னா: அருணாச்சல பிரதேசத்தில் தங்களது 6 எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜகவின் ஆட்டத்துக்கு பீகாரில் பதிலடி தர தயாராகிவிட்டது ஜேடியூ. தமக்கு முதல்வர் பதவி மீது விருப்பம் இல்லை; பாஜகவே முதல்வரை தேர்வு செய்து கொள்ளலாம் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவுக்கு (ஐக்கிய ஜனதா தளம்) 7 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் 6 பேர் பாஜகவுக்கு தாவியது பெரும் பரபரப்பானது. அருணாச்சல சட்டசபையில் 2-வது பெரிய கட்சியாக இருந்த ஜேடியூ இப்போது பரிதாப நிலைக்கு கூட்டணி கட்சியான பாஜகவினாலேயே தள்ளப்பட்டது.
பாஜகவின் இந்த ஆட்டத்தை ஜேடியூ இம்மியளவு கூட ரசிக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜேடியூ மூத்த தலைவர் கேசி தியாகி, கூட்டணி அரசியலுக்கு இது நல்ல அறிகுறி அல்ல என விமர்சித்திருந்தார்.
என்னாச்சு... ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியை திடீரென உதறிய நிதிஷ்குமார்... புதிய தலைவர் தேர்வு!
அடல் தர்மம்
மேலும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 23 கட்சிகளுடனும் பாஜகவுக்கு எந்த முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அந்த "அடல் தர்மத்தை" பாஜக கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேசி தியாகி சுட்டிக் காட்டி இருந்தார்.
நிதிஷ் ராஜினாமா
இதனிடையே ஜேடியூ செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். ஜேடியூவின் புதிய தலைவராக நிதிஷ்குமாரின் நம்பிக்கைக்குரியவரான ஆர்பிசிங் தேர்வு செய்யப்பட்டார்.
வேண்டாமே முதல்வர் பதவி
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் முதல்வர் பதவியை பாஜக விரும்புவதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. இந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவும் நான் விரும்பவும் இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த போதே நான் இதை தெரிவித்தேன். ஆனால் கூட்டணியின் அழுத்தத்தால் மீண்டும் முதல்வராக பதவியேற்றேன் என கூறியிருக்கிறார்.
சட்டசபை நிலவரம்
பீகார் சட்டசபை தேர்தலில் ஆர்ஜேடி 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. 74 இடங்களில் வென்ற பாஜக 2-வது இடத்தைப் பெற்றது. ஜேடியூ கட்சி 43 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 19; இடதுசாரிகள் 12 இடங்களில் வென்றன. பாஜக- ஜேடியூ இணைந்து தற்போது கூட்டணி ஆட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் கூட்டணி கட்சிகளான விஐபி கட்சி 4 இடங்களிலும் ஹிந்துஸ்தானி ஆவாம் மோச்சா 4 இடங்களிலும் வென்றுள்ளன.
பாஜக அரசு கவிழுகிறது?
பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 இடங்கள். தற்போதைய நிலையில் ஜேடியூவையும் சேர்த்து பாஜக கூட்டணிக்கு 125 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆர்ஜேடி கூட்டணிக்கு 110 இடங்கள் உள்ளன. பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகினால் இயல்பாகவே ஆட்சி கவிழ்ந்துவிடும். எந்த கட்சியையும் உடைக்காமல் இருந்தால் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியாது. இருப்பினும் ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளை உடைத்து சித்து விளையாட்டுக்கும் பாஜக தயாராகிவிடும். இதனால் பீகார் அரசியலில் அசாதாரண நிலைக்கான அறிகுறிகள் உருவாகிவிட்டன.