அவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்.. மகா பாவிகள்! - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கொதிப்பு
பாட்னா: தேசந்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கையை மீறி மது அருந்துபவர்கள் இந்தியர்களே இல்லை என்றும், அத்தகையவர்கள் மிகப்பெரும் பாவிகள் எனவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார்.
பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த முறை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் குடிமகன்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தடையின்றி நடைபெறும் கள்ளச்சார வியாபாரம்
பீகாரில் அரசு மதுவிலக்கை அமல்படுத்தினாலும் கள்ளச்சார விற்பனை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி பீகாரில் கள்ளச்சாராயம் அருந்திய 12 பேர் உயிரிழந்தனர். இது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஓராண்டில் கள்ளச் சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு கள்ளச் சாராயம் அருந்தி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகள் பீகாரில் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கு தவறான முறையில் அறிமுகம் செய்ததாலேயே அங்கு கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறப்பதாக குற்றம்சாட்டியுள்ளன.

மது அருந்தி கைதானவர்களை விடுவிக்க கோரிக்கை
இந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை கவுன்சில் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.சி. சுனில் சிங், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற்று அவர்களை சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மது அருந்துபவர்கள் ஆண்டி இந்தியன்ஸ்
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "மது அருந்துபவர்களை மகா பாவிகள் என்று நான் அழைப்பேன். மகாத்மா காந்தியின் மதுவிலக்குக் கொள்கையை கடைபிடிக்காதவர்கள் இந்தியர்களே இல்லை. அவர்கள் எந்த திறமையும் இல்லாதவர்கள். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்கள் குடும்பத்தினருக்கு அரசு எந்த நிவாரணமோ இழப்பீடோ வழங்காது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய உள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications