பாசஞ்சர் ரயிலை ‘அம்போ’ என நடுவழியில் நிறுத்திவிட்டு போன டிரைவர்! தேடிச்சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி!
பாட்னா: பீகார் மாநிலத்தில் ரயில் ஓட்டுநர் மது அருந்துவதற்காக ரயிலில் இருந்து இறங்கியதால் சமஸ்திபூரிலிருந்து சஹர்சா சென்ற பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகச் சென்றது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஹசன்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர் மது அருந்தச் சென்றுவிட்டு, முழு போதையில் மட்டையானதால் பயணிகள் ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே நிறுத்தப்பட்டது.

பீகாரின் சமஸ்திபூரிலிருந்து சஹர்சா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முதலில் கடப்பதற்காக ஹசன்பூர் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில், ரயிலின் உதவி லோகோ பைலட் கரம்வீர் யாதவ் என்ஜினில் இருந்து திடீரென காணாமல் போனார்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் போன பின்பு, இந்த பயணிகள் ரயில் கிளம்புவதற்கான சிக்னல் கொடுத்த போதும் ரயில் நகராததால், ஸ்டேஷன் மாஸ்டர் அதிர்ச்சியடைந்து என்ஜின் பெட்டியில் ஏறிப் பார்த்தபோது டிரைவர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ரயில் நீண்ட நேரமாக நகராமல் அங்கேயே நின்றதால் எரிச்சலடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து திடீரென காணாமல் போன உதவி லோகோ பைலட் கரம்வீரை தேட ரயில்வே போலீஸார் வரவழைக்கப்பட்டனர். ரயில்வே போலீஸார் ஊருக்குள் சென்று ரயில் ஓட்டுநரை தேடியுள்ளனர்.
அப்போது கரம்வீர், 'ஹாஃப்' அடித்துவிட்டு, கடுமையான போதையில் நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்துள்ளார். பணி நேரத்தில் ரயிலை 'அம்போ' என விட்டுவிட்டு மது அருந்தச் சென்ற கரண்வீரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு ஏ.எல்.பி கரம்வீர் மது குடிக்கச் சென்றது குறித்து விசாரணை நடத்த கோட்ட ரயில்வே மேலாளர் உத்தரவிட்டார். மேலும், அதே ரயிலில் இருந்து மற்றொரு ஏ.எல்.பி மூலம் அந்த ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து, வேலை நேரத்தில் மது அருந்திய டிரைவர் கரம்வீர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications