பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்ற மணிவேல்.. மறு நாளே மாரடைப்பால் மரணம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற மணிவேல் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்னும் ஒருசில மாவட்டங்களில் வாக்குகள் எண்ணும் பணியானது, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் என்கிற சின்னமணி(72).
இவர் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தில் போட்டியிட்டு 962 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டவரை விட 166 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான வெற்றி சான்றிதழை நேற்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த மணிவேல் என்கிற சின்னமணிக்கு இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை அரியலூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
3 ஆண்டுகளாக திட்டமிட்டும்... குழப்பமோ குழப்பம்... ஆணையம் மீது சீறும் ஆசிரியர்கள்
பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றவர் வெற்றிச் சான்றிதழை பெற்ற மறுநாளே இறந்த சம்பவம் ஆதனூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மணிவேலுக்கு ஜோதிமணி என்ற மனைவியும் குமார், சரஸ்வதி, அன்புச்செல்வன், ஆனந்தி, ரமேஷ், ஆகிய 6 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.