மின்துறை ஊழியர்கள் அலட்சியம்.. புதுவை சட்டசபை வாசலில் அமர்ந்து அதிமுக கொறடா தர்ணா!
புதுச்சேரி : புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக நேற்று இரவு புதுச்சேரியில் பல இடங்களில் ஏற்பட்ட மின்வெட்டை சரிசெய்ய மின் துறை ஊழியர்கள் வராததை கண்டித்து, அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் சட்டபேரவை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின் வினியோகம் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு மின் துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் மின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதில்லையெனமின்துறை ஊழியர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன்காரணமாக நேற்று இரவு புதுச்சேரியில் பல இடங்களில் திடீரென மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. பழுது பார்ப்பதற்காக மின் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் வராததால் பொதுமக்கள் வெகுவாக பாதித்தனர்.

மின் துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில், மின் பராமரிப்பு பணியில் மின் துறை ஊழியர்கள் ஈடுபடாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிப்பதாக கூறி அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ சட்டப்பேரவை வாயில் முன்பு தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு மேலாக நடடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து மின் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மின் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ்பெற்றார் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன். அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் போராட்டம் காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications