தமிழகம் மட்டுமல்ல.. பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகையும் ரத்து! காணொலியில் நிகழ்ச்சி
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 12ம் தேதி புதுச்சேரியில் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் மோடி நேரில் பங்கேற்காமல் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 7500 இளைஞர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து இளைஞர்களிடம் பேசுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் பிரதமர்
தேசிய இளைஞர் தின விழாவிற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரமாக செய்து வருகிறது. பிரதம நரேந்திர மோடி பங்கேற்க இருந்ததால் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் புதுச்சேரிக்கு நேரில் வந்து விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

கொரோனா பரவல்
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் வார இறுதி ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு கடந்த நில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடியின் புதுச்சேரி நிகழ்ச்சி ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

பிரதமர் வருகை ரத்து
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நீடித்து வந்தது. இந்த நிலையில் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிரதமர் புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க மாட்டார் என கூறியுள்ளார்.

முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
இது குறித்து பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 12-ஆம் தேதி புதுச்சேரி நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என கூறியுள்ளார். மேலும் டெல்லியில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலமாக தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து இளைஞர்களிடையே உரையாற்றுவார் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications