"டேய்.. என்னடா பண்றீங்க".. டக்குனு கேட்ட சந்திர பிரியங்கா.. நெளிந்த சிறுவர்கள்.. பூரித்த புதுச்சேரி
புதுச்சேரி பெண் அமைச்சர் சிறுவர்களுடன் விளையாடும் வீடியோ ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது
புதுச்சேரி: ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்த்த புதுச்சேரி மக்கள் மூக்கின் மீது விரலை வைத்து, பூரிப்புடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து வருகிறார்கள்..!
புதுச்சேரி மாஜி அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா.. 32 வயதுதான் ஆகிறது.. இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது... புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றது இதுவே முதல்முறையாகும்..
முதல் முறை
நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த நெடுங்காடு தொகுதியின் உறுப்பினர் சந்திர பிரியங்காதான் அந்த பெருமையை தட்டி சென்றார்... தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாகவே கவனித்து வருவதாக மிக குறுகிய காலத்தில் இவர் பெயரும் எடுத்தவர். இதற்கு காரணம், சட்டமன்றத்தில் இவர் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றும் பெரும் வரவேற்பை பெற்றதுதான்..
நெருக்கம்
அதுமட்டுமில்லாமல், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.. இவர் திடீர் திடீரென நேரடி ஆய்வுக்கு கிளம்பி சென்றுவிடுவார்.. பொதுமக்களிடம் நெருங்கி பழகி, அவர்களின் குறைகளை கேட்பார்.. இதன்மூலம் மேலும் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் இந்த இளம் அரசியல்வாதி.. இவர் பொதுமக்களுடன் நெருங்கி பழகும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.. அந்த வகையில் தன் உறவினர் வீட்டு திருமணத்தில், இவர் ஆடிய நடனம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
அம்மன் க்ளிப்பிங்ஸ்
மகளிர் தினத்தில் அம்மன் வேடமிட்ட வீடியோவும் வைரலாகியது.. அதேபோல, சமீபத்தில் வணிக நிறுவனம் ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுத்த சிறுவனிடம் 'நான்தான் அமைச்சர் நம்புடா" என்று விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது... இந்த நிலையில் குழந்தைகள் தினமான நேற்றைய தினம், பள்ளிச் சிறுவர்களிடம் பாடச் சொல்லி அவர் செல்லமாகக் கொஞ்சும் வீடியோவை தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்திருக்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா... இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது..
ஸ்டேட்டஸ்
காரில் சென்றுகொண்டிருந்த சந்திர பிரியங்கா, வழியில் பள்ளிக்கு செல்வதற்காக நின்றுகொண்டிருந்த பள்ளி சிறுவர்களை பார்க்கிறார்.. உடனே அந்த சிறுவர்களுக்கு உதவி செய்ய காரை அவர்கள் அருகில் நிறுத்தி, அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் கொள்கிறார். சந்திர பிரியங்காவை சுற்றி காருக்குள் சிறுவர்கள் உட்கார்ந்துள்ளனர்.. அவர்களிடம் ஜாலியாக பேசுகிறார் சந்திர பிரியங்கா.. பிறகு அதை வீடியோவாகவும் எடுக்கிறார்.. தங்களை வீடியோ எடுப்பதை பார்த்த அந்த சிறுவர்களுக்கு திடீரென வெட்கம் வந்துவிட்டது..
லிஃப்ட் + வெட்கம்
உடனே தங்கள் முகத்தை செல்போன் கேமராவில் இருந்து மறைக்க முயல்கிறார்கள்.. இதை பார்த்த அமைச்சரோ, "அடப்பாவிகளா.. நான்தான்டா வெட்கப்படணும்.. நான் பண்ண வேண்டியதெல்லாம் நீங்க பண்றீங்க என்கிறார்"... உடனடியாக அவர்களில் ஒரு மாணவன், இவன் நல்லா பாட்டு பாடுவான் என்றான்.. உடனே சந்திரபிரியங்கா, "அப்படியா எங்கே பாடு" என்று சொல்லி செல்போன் வீடியோவை அந்த சிறுவன் பக்கம் திருப்பினார்.. ஆனால் மாணவன் அமைதியாக இருக்க, "உங்கள் ஊரே வந்துவிடும் போல, சீக்கிரம் பாடுடா" என்கிறார்.
டக்கால்டி
அந்த மாணவன் சிரித்தபடி வெட்கப்படுகிறான். பாட தெரிஞ்சா பாட மாட்டனா? என்று அந்த சிறுவன் சொல்ல, அதற்கு அமைச்சர் "டேய் டக்கால்டி மண்டையா" என்று கலாய்த்து தள்ளுகிறார். லிஃப்ட் கொடுத்ததுடன், அவர்களுடன் அமைச்சர் இந்த அளவுக்கு சகஜமாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறாரே என்று புதுச்சேரி மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.. இந்த வீடியோவுக்கு சந்திர பிரியங்காவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் குவிந்து வருகின்றன...!!!
சீரியஸ் + கேஷூவல்
பொதுவாக, அமைச்சர்கள் என்றாலே இறுக்கமாகவும், டென்ஷனாகவும் இருப்பது வழக்கம்.. காரணம், அவர்களின் துறைகள் அந்த அளவுக்கு பொறுப்பு வாய்ந்தது.. பரபரப்புடன் எந்நேரமும் இயங்கி கொண்டே இருப்பவர்களும்கூட.. அதனால், அமைச்சர்களிடம் நெருங்கி பேசவே ஒரு தயக்கம் மக்களிடம் இருந்து வருகிறது.. சந்திர பிரியங்காவை பொறுத்தவரை இளம்வயதுஎன்பது ஒருபுறம் இருந்தாலும், இயல்பாகவே அனைவரிடம் கேஷூவலாக பேசக்கூடியவர்.. தன் தொகுதிக்கான பணிகளில் குறைகள் இல்லாமல் அனைத்தையும் செய்து வந்தாலும், அவ்வப்போது, இப்படி மக்களிடம் இயல்பாக பேசுவது, மக்களை இவரிடம் நெருங்க வைத்திருப்பதாகவே சொல்கிறார்கள் புதுச்சேரி மக்கள்.
அக்கா.. அக்கா..
இந்த வீடியோ வைரலானதையடுத்து, அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் ஒரு சேனலில் பேட்டி எடுத்துள்ளனர்.. சிறுவர்களுடனான நிகழ்வு குறித்து அமைச்சர் சொன்னபோது, "வழக்கமாக என்னுடைய தொகுதிக்கு செல்லும்போது, ஸ்கூல் விட்டு நடந்து செல்லும் மாணவர்களை என்னடைய காரில் ஏற்றிச் செல்வேன்... இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். அக்கா... அக்கா... என்றுதான் என்னுடன் அன்போடு பேசுவார்கள்.. அவர்கள் 'பசங்க' என்று ஒரு வீடியோவும் நடித்திருக்கிறார்கள்... அந்தக் குழந்தைகள் நன்றாக கானா பாட்டும் பாடுவார்கள். அதனால்தான் அவங்களை பாடச் சொல்லி கேட்டேன் என்கிறார் அமைச்சர் சந்திர பிரியங்கா.