ஓபிஎஸ்-ஈபிஎஸ் சண்டையெல்லாம் சும்மா.. புதுவையில் கட்டிப்புரளும் ர.ரக்கள் - அங்கேயும் ஒற்றை தலைமையாம்!
புதுச்சேரி : தமிழக அரசியலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், அதையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு புதுச்சேரி அதிமுகவில் பிளவு இருந்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஓம் சக்தி சேகரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான அன்பழகனும் மாறி மாறி கருத்துக் கூறி கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கு.. 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
ஓபிஎஸ்ஸின் பினாமி ஓம் சக்தி சேகர் என அன்பழகன் குற்றம்சாட்டிய நிலையில், புதுச்சேரியில் நான் தான் ஒற்றைத் தலைமையாக இருப்பேன் என் சவால் விடுத்துள்ளார் சேகர்.
அதிமுக மோதல்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றைத் தலைமை விவாதம் காரணமாக மோதல் எழுந்து அந்த விவகாரம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையைக் கைப்பற்ற ஈ.பி.எஸ் தரப்பும், இரட்டைத் தலைமையாகவே இருக்கவேண்டும், தங்களது இடம் பறிபோகக் கூடாது என ஓ.பி.எஸ் தரப்பினரும் முட்டி மோதி வருகின்றனர். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என இரு தரப்பினரும் சட்டப்பூர்வமாகவும் அணுகி வருகின்றனர். வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த திட்டமிடும் எடப்பாடியின் முயற்சியைத் தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரி அதிமுக
இதற்கிடையே, புதுச்சேரி அதிமுகவிலும் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடுமையாக கிளம்பியுள்ளது. புதுச்சேரியில் கிழக்கு மாநில செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அன்பழகனும், மேற்கு மாநிலச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரும் உள்ளனர். புதுச்சேரியில் ஒரு தரப்பினர் அன்பழகன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இன்னொரு தரப்பு அதிமுகவினர் மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்கின்றனர். புதுச்சேரியிலும் இரு பிரிவுகளாக அதிமுகவினர் செயல்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பிளவு
ஒற்றை தலைமை விவகாரத்தால் புதுச்சேரி அ.தி.மு.க இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க வேண்டும் என்று அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி வருகிறார். ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அ.திமு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான், அவரை தவிர வேறு யாரையும் பொதுச்செயலாளராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகிறார். இப்படியாக இங்கு ஓபிஎஸ் - ஈபிஸ் பஞ்சாயத்து போல புதுச்சேரியில் ஓம் சக்தி சேகர் - அன்பழகன் மோதல் பகிரங்கமாக நிலவி வருகிறது.
அன்பழகன்
இந்நிலையில் இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், "அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டே சட்டசபையில் கருணாநிதியின் புகழ் பாடியவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் எழுதிய புத்தகத்தை தனது டிரங்கு பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறினார். அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வைத்தார். தமிழக மக்களுக்காக அர்ப்பணிப்போடு ஸ்டாலின் பணியாற்றுவதாக ஓ.பி.ஆர் கூறினார்.
திமுகவோடு கள்ள உறவு
தி.மு.க என்ற தீய சக்தியை அழிப்பதற்காக எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. தி.மு.கவோடு கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அ.தி.மு.கவில் தொடர முடியாது. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவிடாமல், ஓ.பன்னீர்செல்வம் பல தடைகளை செய்தார். இவற்றை முறியடித்து பொதுக்குழு நடந்தது. கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துவிட்டார். வரும் 11-ம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். நாங்கள் ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டோம். எனவே இங்கு அவருக்கு ஆதரவாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். ஓபிஎஸ்ஸின் பினாமி தான் ஓம் சக்தி சேகர்" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
ஓம் சக்தி சேகர்
அதேசமயம், ஓபிஎஸ் ஆதரவாளரான ஓம் சக்தி சேகர் கூறுகையில், "கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் அமைதி காக்க விரும்பினேன். அதற்கு நேர்மாறாக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார். நான் கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். இருப்பேன். அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய 4 பேர் முயற்சிக்கின்றனர். கட்சி, கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன்.
ஒற்றைத் தலைமை நான் தான்
நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே கட்சியின் தலைமை யார் என முடிவு செய்ய வேண்டும். புதுச்சேரி மாநில அதிமுகவினர் எனது தலைமையில் செயல்படுவார்கள். தமிழகத்தில் அதிமுக ஒற்றைத் தலைமை ஏற்றவுடன் புதுச்சேரியில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக நான் தான் இருப்பேன். அன்றைய தினத்தில் இருந்து அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். " எனத் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடக்கும் மோதல் தமிழக மோதலை விட பெரிதாக இருப்பதாக புதுச்சேரி அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.