புதுவையில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு.. புதிதாக 27 பேர் பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று புதிதாக 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 271 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 149 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும், கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது நபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 116 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் இன்று மேலும் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும், ஒருவர் ஜிப்மரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நீரிழிவு, உயர்ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 52 வயது நபர் கொரோனா தொற்றுடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது கூட நன்றாக இருந்தார். திடீரென இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கொரோனா தொற்றால் இறக்கிறார்கள், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். ஆனால் இறப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு நன்றாக பேசிக்கொண்டிருந்த 52 வயது நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
எனவே, கொரோனா வீரியத்தை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். தற்போது கொரோனா வேகமாக பரவுகின்ற நிலையில் உள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. எனவே, மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். புதுச்சேரியில் இதுவரை 11,356 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10,920 பரிசோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. 179 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது.
இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர்கள் 3 மாதங்களாக கொரோனா பணியில் ஈடுபட்டு வருகினற்னர். அவர்களுக்கு சிறிது ஓய்வு செய்யப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த 80 சதவீதம் பேருக்கு தொற்று வந்துள்ளது. அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 23 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். தினமும் காலை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு பணி நேரம் மூன்று தொகுதி ஒரு அரசு செயலர் பொறுப்பேற்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை செயல்பட்டால் மட்டும் போதாது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே, மூன்று தொகுதிக்கு ஒரு அரசு செயலர் பொறுப்பேற்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.