டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை? அரசின் நடவடிக்கை சரியில்லை! மார்க்சிஸ்ட் கம்யூ. அதிருப்தி!
புதுக்கோட்டை: கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை ஏன் மூடவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை சரியில்லை என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், கே.பாலகிருஷ்ணன் எழுப்பியுள்ள இந்தக் கேள்வியும், அரசு மீதான அவரது அதிருப்தியும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். 8 வழிச்சாலை திட்டம் குறித்து சமீபநாட்களாக விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

டாஸ்மாக் கடைகள்
மேலும், டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு படிபடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை ஏன் அரசு மூடவில்லை என கேள்வி எழுப்பினார். எது எதற்கோ ஊரடங்கு போடும் அரசு டாஸ்மாக் கடைக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருப்பதாக வேதனை தெரிவித்தார்.

அதிருப்தி கருத்து
தற்போதைய சூழலில் முழுமையாக டாஸ்மாக் கடைகளை மூட முடியாவிட்டாலும் கூட குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மட்டும் அதனை நடத்தினால் என்ன தவறு என மீண்டும் அரசுக்கு கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் விவகாரத்தில் மட்டும் அரசின் நடவடிக்கை சரியில்லை எனத் தெரிவித்தார் கே.பாலகிருஷ்ணன். இவரது இந்த அதிருப்தி கலந்த செய்தியாளர்கள் சந்திப்பின் பின்னணியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியின் ஆட்சி மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. ஏற்கனவே டாஸ்மாக் கடை திறப்பை மையமாக வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications