"லீவு விடு தெய்வமே.. உனக்கு கோயிலே கட்டுறேன்" - ஆட்சியர் கவிதா ராமுவிடம் கெஞ்சி கூத்தாடும் மாணவர்கள்
புதுக்கோட்டை: மழை பெய்தாலும் பெய்தது.. இந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை. ஏதோ ஸ்கூல் மிஸ்ஸிடம் லீவு கேட்டு கெஞ்சுவதை போல, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவிடம் விடுமுறை விடும்படி இன்ஸ்டாகிராமில் கெஞ்சலும் கதறலுமாக மாணவர்கள் மெசேஜ்களை தட்டி விட்டுள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை அடித்து விளாசுகிறது. கடந்த சில வாரங்களாகவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்யும் மழை...திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மழைக்கால கொண்டாட்டங்கள்..
மழை பெய்வது யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ, பள்ளி மாணவர்களுக்கு அது என்றைக்குமே கொண்டாட்டம் தான். ஏனெனில் மழைக்காலங்களில் மாணவர்களுக்கு சாதகமான விஷயங்கள் பல இருக்கின்றன. பள்ளிக்கு தாமதமாக செல்லலாம்.. கேட்டால் மழை மீது பழிபோட்டுக் கொள்ளலாம். வீட்டுப்பாடங்களை கட்டாயமாக முடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் கேட்டால், "நேற்று மழை பெய்து வீட்டுக்குள் தண்ணி வந்துவிட்டது சார்.." என பல புருடாக்களை அவிழ்த்துவிடலாம். யாருக்கு தெரியப்போகிறது..? அதுமட்டுமல்லாமல், பொதுவாக பல ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் மூடில் இருக்க மாட்டார்கள். ஜாலியாக எதையாவது பேசி நேரத்தை கடத்திவிடலாம். இதுபோன்ற எண்ணற்ற சவுகரியங்களை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதைவிட ஜாலியான விஷயம், கொஞ்சம் அதிகமாக மழை வந்தாலே போதும்.. பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து விடுவார்கள். பிறகென்ன., நம் வீட்டுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ சென்று ஆட்டம் போட வேண்டியதுதான்.
டிவி முன் தவம் கிடக்கும் மாணவர்கள்
இந்நிலையில், தற்போது மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் நம் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவித்துவிட மாட்டார்களா என மாணவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தினமும் காலையில் எழுந்ததும் செல்போனை பார்க்கும் மாணவர்கள், மழைக்காலங்களில் ஏதாவது செய்தித் தொலைக்காட்சிக்கு முன்பு தவம் கிடப்பதை நாம் பார்த்திருப்போம். விடுமுறை அறிவிப்பு வருகிறதா என்பதை பார்க்க அத்தனை ஆர்வம் அவர்களுக்கு.
ஆட்சியருக்கே நேரடியாக 'மெசேஜ்'
இந்த சூழலில், விடுமுறை அறிவிப்பு வராதா என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த மாணவர்கள் தற்போது ஒரு படி மேலே சென்று, நேரடியாக மாவட்ட ஆட்சியர்களிடமே லீவு கேட்கும் அளவுக்கு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் வேறெங்கும் இல்லை. நம் புதுக்கோட்டையில் தான் நடந்திருக்கிறது. கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"லீவு விடலைனா பைத்தியம் பிடிச்சிரும்.."
அதில், ஆட்சியர் கவிதா ராமுவின் இன்ஸ்டா பக்கம், மாணவர்களின் மெசேஜ்களால் திக்குமுக்காடி இருப்பதை காண முடிகிறது. ஏதோ பள்ளி ஆசிரியையிடம், மிஸ் மிஸ் லீவு கொடுங்க மிஸ் என கெஞ்சும் ரேஞ்சுக்கு ஆட்சியருக்கு மாணவர்கள் மெசேஜ்களை பறக்க விட்டுள்ளனர். அதில் பல மெசேஜ்களை பார்த்தாலே சிரிப்பை அடக்க முடியவில்லை. அவற்றில் சில மெசேஜ்களை இங்கு பார்ப்போம். "லீவ் மட்டும் விட்டு பாருங்க மேம்.. உங்களுக்கு கோயிலே கட்டுறேன் என் மனசுல", "படிச்சு படிச்சு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு மேம்; நாளைக்கு லீவ் இல்லனா பைத்தியமாகவே மாறிடுவேன்", ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு மேம். மழை பெய்யுது. லீவு கொடுங்களேன்", "நாளைக்கு ஸ்கூலுக்கு லீவு விடுங்க மேம். நீங்க எடுக்குற முடிவுலதான் பல பேரோட சந்தோஷம் இருக்கு. நாங்க ஒன்னும் தினமும் லீவு கேக்கலையே.." இதுபோன்ற மெசேஜ்களை ஆட்சியரின் இன்ஸ்டாவுக்கு மாணவர்கள் அனுப்பி உள்ளனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, ஆட்சியரின் இன்ஸ்டாவுக்கு ஏராளமான நன்றி மெசேஜ்களும் வந்துள்ளன. அதில் ஒரு மெசேஜில், "லீவு கொடுத்ததுக்கு நன்றி மேம்.. உங்களை மறக்கவே மாட்டேன். தேவதை நீங்க..!" என மாணவன் ஒருவன் கூறியிருக்கிறான். இதை பார்த்த நெட்டிசன்கள், "டேய் தம்பிகளா அவங்க கலெக்டர்டா.." என்ற தொனியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.