சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா? பட்டென வேல்முருகன் சொன்ன பதில்.. டக்கென திரும்பிப் பார்த்த ‘தலை’!
புதுக்கோட்டை : தமிழர்களின் நலனுக்காக சீமானுடன் இணைந்து செயல்படும் தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சீமானுடன் இணைந்து செயல்படுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
திமுகவுடன் கூட்டணி அமைத்து திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன், சமீபகாலமாக திமுகவை விமர்சித்துப் பேசி வருகிறார். இந்நிலையில், வேல்முருகனின் இந்தப் பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வாரி இட இதுக்கீடு
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தி.வேல்முருகன், "தமிழகத்தில் அனைத்து சமூகத்திற்கும் சமூக நீதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சாதிகளுக்கு தகுந்தாற்போல் கல்வி வேலைவாய்பில் இடம் அளித்திட வலிவுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆட்சியர், கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறும். அனைத்து சாதி மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி வேலைவாய்ப்பில் இடம் வழங்கினால் தான் தமிழகத்தில் அனைவருக்கும் சமமான இட ஒதுக்கீடு கிடைக்கும், அமைதியான சூழல் நிலவும்.

ஆன்லைன் லாட்டரி
ஆன்லைன் லாட்டரி விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை. வலுவான சட்டத்தை இயற்றி ஆன்லைன் லாட்டரியை தடை செய்ய வேண்டும் என்பதே எங்களின் கருத்து. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த 3 சுங்கசாவடிகள் நான் கொடுத்த அழுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளது. மற்ற மாநாகராட்சிகளில் உள்ள சுங்கசாவடிகளை மூட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் மூட வேண்டும் என்பதே எங்களின் கருத்து.

போராட்டம் தொடரும்
தமிழகத்தில் தமிழர்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்புகள் கிடைக்கச்செய்ய வேண்டும். என்எல்சியில் 296 பணியிடம் நிரப்பப்பட்டதில் பூர்வீக குடிமக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழ் சமுதாயத்திற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து போராடி வருகின்றோம். எங்களது போராட்டம் தொடரும்.

சீமானோடு சேர்ந்து
தொடர்ந்து பேசிய வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இணைந்து போராடியுள்ளோம் எனத் தெரிவித்தார். அப்போது, எதிர்காலத்தில் சீமானோடு இணைந்து செயல்படுவீர்களா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இணைந்து பயணிப்போம்
அதற்கு பதிலளித்த வேல்முருகன், "தமிழர்களின் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் தமிழர்களின் நலன் காக்கவும் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானோடு சேர்ந்து பயணிக்கும் தேவை ஏற்பட்டால் நிச்சயம் இணைந்து பயணிப்போம். இதற்கு காலம் பதில் சொல்லும். பாமகவோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பில்லை. அதேநேரம், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை பாமக முன்னெடுக்கும்போது அதற்கு நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக உடன் மோதல்
பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏவான வேல்முருகன், லோக்கல் திமுக அமைச்சர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக திமுகவை வேல்முருகன் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வேல்முருகன், சீமானோடு சேர்ந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் பயணிப்போம் எனத் தெரிவித்துள்ளது திமுகவினர் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications