காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கு வந்த சிக்கல்! கட்சிக்குள் ஆரம்பித்த பஞ்சாயத்து! பரபர பாலிடிக்ஸ்?
இராமநாதபுரம் : கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக காதர் பாட்சா முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
ராமநாதபுரத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் இடையேயான மோதல் காரணமாக கடந்த சில நாட்களாகவே இராமநாதபுரம் திமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
இதனால் மாவட்ட செயலாளர் மாற்றம் இருக்கும் என உடன்பிறப்புகள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான மாவட்ட செயலாளர் பட்டியலில் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் பெயரே இடம் பெற்றிருந்தது.

முத்துராமலிங்கம் காதர்பாட்ஷா
இதனால் அவர் தரப்பு ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தாலும் கட்சியில் ஒரு தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இராமநாதபுரம் மாவட்ட செயலாளரை வரவேற்க 1500 வாகனங்கள் வரவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஒவ்வொரு ஒன்றியம் மற்றும் நகரத்தில் இருந்து வரவேற்க 40 வாகனங்கள் வரவேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக கூறினர் ராமநாதபுரம் உடன்பிறப்புகள்.

ஆதரவாளர்கள் மாற்றம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளராக முத்துராமலிங்கம் அவர்கள் அறிவிக்கப்பட்டபோது மாவட்ட எல்லையில் வரவேற்க சென்ற இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தற்போது அவரை வரவேற்க செல்லவில்லை. ஆனால் அன்று முத்துராமலிங்கம் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த அகமதுதம்பி, இராமநாதபுரம் கார்மேகம், இராமநாதபுரம் பிரபாகரன் உள்ளிட்ட பலர் வரவேற்க சென்றனர். இதனால் குறுகிய காலத்தில் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தின் ஆதரவு ஒருபுறம் அதிகரித்தும் மறுபுறம் சரிந்தும் உள்ளது.

சாதி சர்ச்சை
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் ஒரு சாதி சர்ச்சை எழுந்திருக்கிறது. அதுவும் திமுகவுக்குள்ளேயே. ஏற்கனவே இராமநாதபுரம் மாவட்டம் சென்சிடிவ் மாவட்டம் என்பது பலருக்கும் தெரியும். இதனால் எப்போதும் காவல்துறையினர் விழிப்புணர்வோடேயே இருப்பார்கள். இந்நிலையில் திமுகவின் மாவட்ட செயலாளரான காதர் பாட்சா முத்துராமலிங்கம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மீது சாதிய வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் மீதும், நகர செயலாளர் ஜிவரத்தினம் மீது குற்றம் சாட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை திமுகவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

கண்டன போஸ்டர்
நேற்று இரவு பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் திமுகவினரிடையே பிரச்சினை ஏற்பட்டதோடும் ஒருவருக்கொருவர் புகார் அளித்த நிலையில், திமுகவினர் மீது எப்ஐஆர் (Cr.No. 335/2022) போடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு எந்தவிதமான பிரச்சினையும் நடைபெறவில்லை. மேலும் பரமக்குடி நகர் திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மீது அதிருப்தியில் இருக்கும் சொந்த கட்சியினரே அவர் மீது புகார் வழக்குப் பதிவு செய்யச் சொன்னதாகவும், கட்சியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாகக் கூறி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட திமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications