சோகத்தில் பழனியின் சொந்த கிராமம்.. நேரில் சென்று கலெக்டர் ஆறுதல்.. இன்று மாலை வருகிறது உடல்
ராமநாதபுரம்: சீன ராணுவத்தின் தாக்குதலால் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பழனியின் உடல் இன்று மாலை மதுரை வந்தடைகிறது. அவரது சொந்த கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளாதாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக நமது ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ராணுவ வீரர்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர் ஆவார்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி தொண்டி வீரசிங்கமடம் அருகே உள்ள கடுக்கழூரைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து என்பவரின் மகன் தான் பழனி (40) இவரின் னைவி வானதிதேவி. தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரசன்னா (10), திவ்யா (8) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். பழனி கடந்த ஜனவரி மாதம் சொந்த ஊர் வந்து சென்ற நிலையில், தற்போது சீன தாக்குதலால் வீர மரணம் அடைந்த செய்தி அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் இன்று மாலை 6.30 மணிக்கு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைகிறது. அங்கிருந்து வாகனம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இருப்பதுடன், 20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அறிவித்துள்ளார்.
அதை எப்போதும் நாங்கள் மறக்க மாட்டோம்.. 20 வீரர்கள் வீரமரணம் பற்றி ராஜ்நாத் சிங் உருக்கம்..டிவிட்!
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் சென்று வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.