குயின் எலிசபெத்துக்கு மெக்காவில் வழிபாடு.. ஏமன் நாட்டுக்காரர் அதிரடி கைது.. பின்னணி முக்கிய காரணம்
ரியாத்: மறைந்த பிரிட்டன் மகாராணி 2ம் எலிசபெத்துக்காக இஸ்லாமியர்களின் புனித இடமான மெக்காவில் ‛உம்ரா' யாத்திரை சென்ற ஏமன் நாட்டு நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
இஸ்லாமியர்களின் புனித நகரமாக மெக்கா உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமே செல்ல வேண்டும். மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மெக்காவுக்கு தடையை மீறி சென்ற ஒருவர் சவுதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:
உங்களோடு கைக்குலுக்கியது தான் உள்ளங்கை பெருமை.. பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு, வைரமுத்து இரங்கல்
காலமான பிரிட்டன் மகாராணி
பிரிட்டன் மகாராணியாக இருந்தவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறிய நிலையில் 70 ஆண்டு காலமாக பிரிட்டன் மகாராணியாக செயல்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அரசு விழா, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அவர் சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக தேர்வான லிஸ் ட்ரஸை மட்டும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 8 ம் தேதி இரவில் உடல்நலக்குறைவால் காலமானார். செப்டம்பர் 19ம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது.
தலைவர்கள் அஞ்சலி
இவர் மகாராணியாக இருந்தபோது 15 பிரிட்டன் பிரதமர்கள் பதவியேற்றுள்ளனர். மகாராணி 2ம் எலிசபெத் மறைவால் பிரிட்டனின் புதிய மன்னராக அவரது மகன் சார்லஸ் பதவி ஏற்றுள்ளார். 96 வயதில் மறைந்துள்ள பிரிட்டன் மகாராணிக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ள நிலையில் பலநாட்டு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மெக்காவில் வீடியோ
உலகின் பல்வேறு இடங்களில் மகாராணி 2ம் எலிசபெத் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் மெக்காவில் பதாகை கைவத்திருக்கும் நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் ஒரு நபர் பதாகை ஒன்றை கையில் வைத்துள்ளார். அதில், ‛‛மகாராணி 2ம் எலிசபெத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை சொர்க்கத்தில் அங்கீகரிக்க கேட்டு கொள்கிறோம்'' என எழுதப்பட்டு உள்ளது.
ஏமன் நபர் கைது
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி விசாரணை நடத்திய சவுதி அதிகாரிகள் ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். இஸ்லாமியர் அல்லாத ஒரு நபர் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான மெக்காவுக்கு செல்ல தடை உள்ளது. அதோடு மெக்காவில் புனித பயணம் செய்பவர்கள் பதாகைகள் வைத்திருக்கவும், கோஷமிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபர் தடையை மீறி இருந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கவே முடியாது
மேலும் இறந்த முஸ்லிம்களுக்காக உம்ரா யாத்திரை செய்வது அங்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள Anglican communion சர்ச்சுகளின் தாய் சர்ச்சாக கருதப்படும் சர்ச் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக இருந்த மகாராணி 2ம் எலிசபெத்துக்காக உம்ரா யாத்திரை மேற்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பலர் கருத்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உம்ரா என்பது ஆண்டு முழுவதும் மேற்கொள்ளும் புனித யாத்திரையாகும். ஹஜ் யாத்திரையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஹஜ் யாத்திரை என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடக்கும். இதில்உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.