சேலம்: “பிரஸ்” ஸ்டிக்கர் ஒட்டிய மொபெட்டில் சுற்றிய கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
சேலம்: பத்திரிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்தும் பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டி சுற்றிக் கொண்டிருந்த பிரபல கொள்ளையனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் சேலம் போலீசார்.
சேலம், கன்னங்குறிச்சி அருகில் உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிகண்டன், வயது-24. இவர் மீது, கன்னங்குறிச்சி, சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை முயற்சி, வழிப்பறி, கொள்ளை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், மணிகண்டன் தன் கூட்டாளிகளான செல்வம், ராமு, தீனதயாளன், பன்னீர் ஆகியோருடன் சேர்ந்து, சேலம் கன்னங்குறிச்சியில், ராமகிருஷ்ணன், ராஜசேகர் ஆகியோரை கொலை செய்ததோடு, ஓய்வு பெற்ற நர்ஸ் ராஜாத்தி என்பவரை வெட்டி காயத்தை ஏற்படுத்தினர்.
மேலும், அங்கிருந்து பத்தரை பவுன் நகை, மொபட், 26,000 ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த கும்பல் பெரும்பாலும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலையில், அவற்றுக்கு, "பிரஸ்' ஸ்டிக்கரை கொண்ட வாகனங்களை பயன்படுத்தி வந்தனர்.
இடைப்பாடியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது, "பிரஸ்" என்று பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டிய நிலையில், மொபட்டில் வந்த மணிகண்டன் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பல் தலைவனாக செயல்படும் மணிகண்டனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் மணிமாறன், வடக்கு உதவி கமிஷனர் அசோகன், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் கமிஷனர் மஹாலிக்கு பரிந்துரை செய்தனர்.
இந்த பரிந்துரையை ஏற்ற, கமிஷனர் மஹாலி, கொள்ளையன் மணிகண்டணை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதை அடுத்து, இன்ஸ்பெக்டர் மணிமாறன், சேலம் மத்திய சிறை அதிகாரிகளிடம் அதற்கான உத்தரவை வழங்கினார்.