ஆக்ஷன் எடுத்தது நாங்க.. ஜாமீனில் எடுத்தது யார் தெரியுமா? ‘கோடநாடு கேஸ்’ - 'U' டர்ன் போட்ட எடப்பாடி!
சேலம் : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான், அந்த வழக்கில் சிறை சென்றவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.கவினர் என குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு குறித்து 316 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில், கடந்த வாரம் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் டீலிங் நடத்திவிட்டார் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ததே அதிமுக அரசு தான், திமுக அவர்களை ஜாமீனில் எடுத்தது ஏன் என சந்தேகம் கிளப்பி இருக்கிறார்.
'யார் வருவா? யார் இருப்பா?’ கதைய பாருங்க.. எடப்பாடி பழனிசாமியை ரவுண்டு கட்டிய ஓபிஎஸ்!
வேகம் காட்டும் ஈபிஎஸ்
அதிமுக மோதல் விவகாரத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு அணிகளுமே தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். நாளை சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறார். இந்தக் கூடத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
பொதுக்கூட்டங்கள்
அ.தி.மு.க பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, வருகிற 17ஆம் தேதியன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 17, 20 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் 20-ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.
ஆலோசனை
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், "கடந்த சட்டசபை தேர்தலின் போது சில தீய சக்திகள் நம்மோடு இருந்து கொண்டு, நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுத்தார்கள். அதனால் தான் நாம் தோற்றுப் போனோம். இல்லை என்றால் ஆட்சியை பிடித்திருப்போம். அ.தி.மு.கவுக்கு துரோகம் செய்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு வெளியேற்றப்பட்டு விட்டனர்.
சதி திட்டம்
அவர்கள் தற்போது ஒன்று சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். எம்.பி, எம்.எல்.ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் நம்மிடம் தான் உள்ளனர். நம்மை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் 2024-ல் ஆட்சி முடியும் நிலை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்." எனப் பேசினார்.
கோடநாடு கொலை வழக்கு
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உடனடியாக சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான்.
ஜாமீனில் எடுத்ததே திமுக தான்
அந்த வழக்கில் சிறைக்கு சென்றவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.கவினர். தி.மு.கவினருக்கும், கேரளாவில் உள்ள குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம். அவர் ஏன் அண்டை மாநிலத்தவருக்கு ஜாமீன் கொடுத்தார்? இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கொடும் குற்றவாளிகள்.
அதிமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த
அதிமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காகவே வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது அவதூறு பரப்பி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை ஒன்றும் கிடைக்காததால் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. காலம் கடத்துவதற்காக, இப்படியே நீடித்துக்கொண்டே செல்லவேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளதாகவே கருதுகிறோம்." எனத் தெரிவித்தார்.