தொடரும் தாக்குதல்.. ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.. சேலத்தில் பரபரப்பு!
சேலம்: சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து, மர்ம நபர்கள் இன்று அதிகாலை வீசிச் சென்றதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை நள்ளிரவில் வீசி விட்டு செல்வதோடு, முக்கிய பிரமுகர்களின் கார்களுக்கும் தீ வைத்து செல்கின்றனர்.
தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவங்களால், கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களில், போலீசார் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர். வாகன சோதனை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், ஆங்காங்கே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சேலம் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி
அந்த வகையில், சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து, இன்று காலை மர்ம நபர்கள் சிலர் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வரும் ராஜன் என்பவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

மண்ணெண்ணெய் குண்டு
இந்நிலையில், இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ பற்ற வைத்து, ராஜன் வீட்டில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பியோடிவிட்டனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் ஏற்படவிருந்த சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து, எதிர் வீட்டைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர், ராஜனுக்கு தகவல் கொடுத்தார்.

காவல் நிலையத்தில் புகார்
இதனையடுத்து, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ராஜன் வீட்டிக்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்த உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, அங்குள்ள சிசிடிவி கேமிராவில் காட்சிகள் ஏதும் பதிவாகியுள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர்.

போலீசார் விசாரணை
இந்நிலையில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளான முகமது ஆரிப் மற்றும் முகமது இஸ்லாமில் ஆகிய இருவரும் சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காவல் நிலையத்தில், சேலம் மாநகர துணை ஆணையாளர் மாடசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

சேலத்தில் பரபரப்பு
கடந்த சில தினங்களாக கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து, சேலத்திலும் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து மர்ம நபர்கள் வீசிச் சென்றதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications