என் உடம்பில் உயிர் இருக்கும் வரை தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைகூட விட்டுதரமாட்டேன்: ராஜ்நாத்சிங்
சேலம்: என் உடம்பில் உயிர் இருக்கும் வரை இந்த தேசத்தின் ஒரு இஞ்ச் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டோம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக கூறினார்.
சேலத்தில் தமிழக பாஜக இளைஞரணி மாநாட்டில் இன்று ராஜ்நாத்சிங் பேசியதாவது:
சீனாவுடனான 9 சுற்று பேச்சுகளுக்குப் பிறகு நமக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்திய நிலத்தை மத்திய அரசு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. என் உடம்பில் ரத்தமும் உயிரும் இருக்கும் வரை இந்தியாவின் ஒரு இஞ்ச் நிலம் கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கப்படமாட்டாது.
எல்லையை ஆக்கிரமிக்க ஒரு நாடு முயற்சித்தால் அத்தனை வழிகளிலும் அதனை எதிர்க்காமல் நாம் சும்மா இருக்கமாட்டோம். இதற்கு என்ன விலையும் கொடுப்போம். சீனாவுடனான 9 சுற்று பேச்சுகளுக்குப் பின்னர் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பின்வாங்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் காங்கிரஸ் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
காங். நல்லவர்களா? கெட்டவர்களா?
தேசத்தின் ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் பேசுகிறது. காங்கிரஸ் நல்லவர்களா? கெட்டவர்களா? என உங்களிடம் கேட்கிறேன். காங்கிரஸ் நல்லவர்களா? கெட்டவர்களா? என மீண்டும் சொல்லுங்கள்
ஒருபோதும் சமரசம் இல்லை
தேசத்தின் இறையாண்மை, ஒருமைப்பாடு, எல்லை பாதுகாப்பு விஷயங்களில் பாஜக அரசு ஒருபோதும் சமரசம் செய்ததும் இல்லை. இனியும் ஒருபோதும் அத்தகைய சமரசங்களை செய்ய மாட்டோம். அப்படிப்பட்ட மோசமான காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்திருக்கிறது. இந்த கூட்டணியை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
ஊழல், தாஜா அரசியல்
காங்கிரஸும் திமுகவும் மக்க்களுக்கு பாரமாக இருக்கின்றவை. சிறுபான்மையினரை தாஜா செய்வதுதான் இந்த கட்சிகளின் கொள்கையாகும். காங்கிரஸும் திமுகவும் ஊழல், தாஜா அரசியலை செய்கின்றன. சமூக சீர்கேடுகளுக்கு இது வழிவகுக்கும். அனைவருக்கும் நீதி என்பதுதான் பாஜகவின் கொள்கை. பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை திமுக-காங்கிரஸை ஆட்டம் காண வைத்திருக்கிறது.
|
இரட்டை இலை- தாமரை கூட்டணி
காங்கிரஸ்- திமுக கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இரட்டை இலை- தாமரைக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். இரட்டை இலையும் தாமரையும் தமிழகத்தை வளப்படுத்த முடியும். தமிழகம் மாற்றத்தை நோக்கி நடைபோட தொடங்கி உள்ளது. பாஜக- அதிமுக கூட்டணி மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.