சேலம் பெண் கொலையில் திருப்பம்.. 5 பேர் திடீர் கைது.. துப்பு துலக்கிய போலீஸ்.. பிடித்தது எப்படி?
சேலம் : சேலம் அருகே ரயில் மேம்பாலத்திற்கு கீழே சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், மூன்று பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் ரயில் மேம்பாலத்தின் கீழே, வயதான பெண் ஒருவர் சடலமாக சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டார். அவரை கொலை செய்தவர்கள், சடலத்தை போர்வையில் சுற்றி, வீசிச்சென்றது தெரிய வந்தது. வயிறு, கை ஆகிய இடங்களில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் இடது கையில், மணிமலர் என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அராஜகம்
பெண் யார்?
இந்தப் பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட அந்தப் பெண், தர்மபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மலர் என்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் கணவர், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி, ஓய்வு பெற்ற மணி என்பதும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது.
கணவர் மரணம்
கணவர் உயிரிழந்த நிலையில், கணவரின் ஓய்வுக்கால பணப்பலன்கள் மற்றும் பென்ஷன் தொகையை வைத்து, கொலை செய்யப்பட்ட மலர் என்ற அந்தப் பெண், உள்ளூரில் வட்டித் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவன் இல்லாத நிலையில், வட்டிக்கு கடன் வாங்கிய நபர்கள், பணத்தை திருப்பி தராமல் அவரை தீர்த்துக் கட்டியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சந்தேகம்
அந்த வகையில், சந்தேகத்தின்பேரில், கடத்தூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அந்த பெண்ணிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதும், அசல் மற்றும் வட்டி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததும் தெரியவந்தது. வாங்கிய பணத்தை உடனடியாக கொடுக்குமாறும், இல்லையென்றால் ஊரைக்கூட்டி மானத்தை வாங்கி விடுவேன் என்றும் கோவிந்தராஜை அந்தப் பெண் எச்சரித்ததாகவும் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து, சடலத்தை போர்வையில் போர்த்தி, ராமமூர்த்தி நகர் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் அம்பலமானது.
கொலை
இந்தக் கொலைக்கு கோவிந்தராஜூவின் சிநேகிதி பிரபாவதி, தாயார் விஜயகுமாரி, அவரது அக்கா புனிதா மற்றும் நண்பர் அன்பானந்த் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கோவிந்தராஜ் உள்ளிட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் ஐந்து பேரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவிந்தராஜ், அன்பானந்த் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையிலும், மற்ற மூன்று பெண்கள் சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால், திட்டமிட்டு பெண்ணை கொலை செய்து, சடலத்தை வீசிச் சென்றதும், கொலையாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.