அதிமுக+நாம் தமிழர் கூட்டணி? அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி.. சொன்ன பதில் என்ன? சீமான் பரபர தகவல்!
சேலம்: அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமக்கு அழைப்பு விடுத்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கூட்டணி வைத்திருப்பது நான் தான். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுடன் சேர்ந்து கூட்டணி வைத்துள்ளேன். ஒரு தலைவன் என்பவன் மக்களை முழுமையாக நம்பனும்; நேசிக்கனும். என் மக்களை முழுமையாக நம்புகிறேன்-நேசிக்கிறேன். அதனால் நாங்கள் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுகிறோம்.

விசிக, பாமக பிளவு: நான் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திரைதுறை சார்பாக இருந்தேன். அப்போது விசிக தலைவர் திருமாவளவன் தலைவராக இருந்தார். அதில் ஒருங்கிணைப்பாளராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இருந்தார். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் போராடுகிற அண்ணாந்து பார்த்து வியக்கிற தலைவர்கள் இந்த இருவரும். திராவிட அரசியல் கெடுவாய்ப்பாக இருவரையும் பிரித்துவிட்டது.
எதிர்கால கூட்டணி இதுதான்: நாம் தமிழர் கட்சி வளர்ந்து 15%, 20% வாக்குகளைப் பெறும் போது விசிக, பாமகவை உள்ளடக்கிய கூட்டணி என்பது சாத்தியமாகலாம். இப்போதைக்கு பேசி பயனில்லை. திருமாவளவன், திமுகவைவிட்டு வரமாட்டார். அன்புமணி ராமதாஸ் என்ன முடிவெடுப்பார் என சொல்லவும் முடியாது. வடக்கே பறையனும் படையாட்சியும் ஒன்னா இருந்து தெற்கே பள்ளரும் கள்ளரும் ஒன்னா இருந்தா எங்களை வேறு யாரும் ஆண்டிருக்கவே முடியாது. அது ஒரு கெடுவாய்ப்பு. இனிவரும் காலங்களிலாவது மாறுதல் உருவாகனும்... உருவாக்கனும்.

எடப்பாடி அழைப்பு விடுத்தார்.. : அண்ணா திமுகவுடனான கூட்டணி குறித்து என்னை எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசினார். அப்போது, கூட்டணிக்கு நான் வர முடியாது. என் கொள்கை முடிவு இதுதான் என எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டேன். அது அய்யாவுக்கும் (எடப்பாடி பழனிசாமிக்கும்) புரிந்திருக்கும். 2024 லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். 20 ஆண்கள்; 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம். இவ்வாறு சீமான் கூறினார்.
அதிமுக மெகா கூட்டணி முயற்சி: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான மெகா கூட்டணியை அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தம்முடன் கூட்டணி குறித்து பேசியதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications