ஹாட் கிளைமேட்டில் ஒரு கூல் நியூஸ்... கொளுத்தும் கோடை வெயிலில் தப்பிக்க ஏற்காட்டில் ஐக்கியமான மக்கள்
சேலம்: கோடை மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு வெயிலிருந்து விடுபட சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
Recommended Video
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சேர்வராயன் மலையான ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என வர்ணிக்கப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 5,326 அடி உயரத்தில் உள்ள ஏற்காட்டில் கோடையிலும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக் கூடிய இடங்கள் பல அமைந்துள்ளதாலும் சுற்றுலாப் பயணிகளை ஏற்காடு நோக்கி படையெடுக்கின்றனர்.
வாட்டி வதைக்கும் வெப்பம்... நீலகிரியில் அடைக்கலமாகும் பிற மாவட்ட மக்கள்! களைக்கட்டிய கோடை சீசன்
ஏற்காட்டின் சிறப்பம்சங்கள்
குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் விரும்பும் படகு சவாரி, குழந்தைகளும் பெண்களும் விரும்பும் மலர்த்தோட்டம், மலை உச்சியில் இருந்து சேலம் மாநகரை கழுகு பார்வையில் பார்க்கக் கூடிய பக்கோடா பாயின்ட், ஆன்மிகத்தை விரும்புபவர்களுக்கான சேர்வராயன் குகைக் கோயில், ராஜ ராஜேஸ்வரி கோயில், இயற்கை அழகை காண விரும்புப வர்களுக்கு காபி எஸ்டேட் என ஏற்காட்டில் கண்டு ரசிப்பதற்கான இடங்கள் ஏராளமாக உள்ளன.
வெளிமாநில பயணிகள்
கோடை விடுமுறையில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டி, கொடைக்கானல் போல ஏற்காட்டிலும் ஆண்டு தோறும் கோடைவிழா நடத்தப் படுவது வழக்கம். ஏற்காட்டில் இந்தாண்டு கோடை விழா நடப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.
கோடை விடுமுறை
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக கோடை விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே ஏற்காட்டில் பல நாட்கள் மழை பெய்ததால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் அண்ணா பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை பார்த்து ரசித்தனர். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சேலத்தில் இருந்து பலர் இரு சக்கர வாகனங்களில் ஏற்காடு வந்திருந்தனர். பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால், ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் குறைவு
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஏற்காட்டில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பது பயணிகளுக்கு அதிருப்தி அளித்து இருக்கிறது. மலைப்பாதைகள் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதோடு, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக சுகாதார வசதிகளை மேம்படுத்துவதோடு, கழிப்பறைகள், சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.