நாளுக்கு நாள் அதிகரிப்பு- சிங்கப்பூரில் முதல் முறையாக ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சிங்கப்பூர்: உலகை நடுங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளில் சிங்கப்பூரில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,699 ஆக உயர்ந்துள்ளது. இங்கு கொரோனாவுக்கு இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர்.
சிங்கப்பூரில் நேற்று பாதிக்கப்பட்ட 477 பேரில் 404 பேர் வெளிநாட்டவர் தங்கும் இடங்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா: அமெரிக்காவில் தொடரும் துயரம்- நேற்றும் ஒரே நாளில் 2479 பேர் மரணம்-பலி 30 ஆயிரத்தை எட்டுகிறது
மலேசியா
மலேசியாவில் நேற்று 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மலேசியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,072. மலேசியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 83. நேற்று ஒரே நாளில் 169 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 2647 பேர் மலேசியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,297 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆகவும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்தான் மிக அதிகபட்சமாக 3,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 1688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.