'9 ஆண்டுகால வனவாசம் முடிவுக்கு வந்தது'- புதிய சபத்துடன் மீண்டும் அரசியலில் சந்திரிகா குமாரதுங்க!!
கொழும்பு: இலங்கை அதிபராக ராஜபக்சே பொறுப்பேற்ற 2005ஆம் ஆண்டு முதல் அரசியல் வனவாசம் மேற்கொண்டிருந்த அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். தற்போது ராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் மைத்ரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்கும் வரை தனது போராட்டம் ஓயாது என்று புதிய சபத்தை பிரகடனம் செய்திருக்கிறார் சந்திரிகா குமாரதுங்க.
கொழும்பில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் சந்திரிகா குமாரதுங்க கூறியதாவது:
இலங்கை அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மைத்ரிபால சிறிசேனவை அதிபர் தேர்தல் பொதுவேட்பாளராக்கியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நடவடிக்கை.
நான் இரண்டாம் முறை அதிபராக பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே நிறைவேற்று அதிபர் முறைமையை ரத்து செய்யவும், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்கவும் அரசியல் சீர்த்திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சித்தேன்.
ஆனால் அப்போது நாடாளுமன்றத்தில் 3ல் இரண்டு பெரும்பான்மை இல்லாததால் அதனை என்னால் செய்ய முடியாமல் போனது. இந்த முறை நாடாளுமன்றத்தில் 3ல் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று அந்தத் தீர்வினை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சேவை நியமித்த போது என்னை பலர் எதிர்த்தனர். ஆனால் அவர் பதவிக்கு வந்த 6 மாதங்களில் எனது பிறந்த நாளன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து என்னை வெளியேற்றினார்.
எனது மவுனமே கட்சியை நிலைகுலையச் செய்தது. 9 ஆண்டுகள் அமைதியாக காத்திருந்தேன். அதிகாரத்திலுள்ள ராஜபக்சே, பொறுக்க முடியாதளவு கொடுமைகளைச் செய்தார்.
அவர் போரில் பெற்ற வெற்றியைப் பாராட்டுகிறேன். ஆனால் போரை வென்றவரையே சிறையில் அடைத்தாரே... அரசு ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை, இந்த நாட்டில் வாழவே முடியவில்லை என மக்கள் வருந்துகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மனிதப் படுகொலை, மோசடிகளே ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது. இந்த நாட்டின் காவல்துறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது. இது பயங்கரமான நிலைமை.
ஆட்சியில் இருப்பவர்களை எதிர்த்தவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் வெள்ளை வான் படுகொலை தான். என்னை மீண்டும் போட்டியிடுமாறு பலரும் கோரினர். அதிகாரத்தில் இருக்கும் பேராசை எனக்கு இல்லை.
எங்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எனினும் நாட்டுக்காக தீர்மானம் எடுத்தேன். வெளியில் இறங்கும்போது உயிர் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க நேரிடும். பயப்படமாட்டேன்.
சத்தியமே எங்கள் பலம். நாம் அதிபர் போராட்டத்தில் இறங்குவோம். அனைவரும் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் இது. மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குவேன். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது.
இவ்வாறு சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.