உச்சத்தில் மாணவர் போராட்டம்.. அவசர நிலையை அறிவித்த ராஜபக்ச.. குழம்பி நிற்கும் இலங்கை மக்கள்
கொழும்பு: இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வரும் சூழலில், அங்கு அவசர நிலை அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
கொரோனாவுக்கு பின் சுற்றுலாத் துறை இன்னும் முழுமையாகப் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இதனால் அந்நாட்டின் பொருளாதாரமும் அப்படியே அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது.
விலையேற்றம்
இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தைத் தொட்டுள்ளது. காய்கறி, பழங்கள் மற்றும் பாலின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இலங்கை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வேலை உணவைப் பெறவே மக்கள் மிக அதிகமாக செலவழிக்க வேண்டி உள்ளது.
மக்கள் கோபம்
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா, சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் இருந்து உதவி பெற முயன்று வருகிறது. இருந்த போதிலும், நிலைமை மேம்பட்டதாகத் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
போராட்டம்
இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் வீதிகளில் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். ராஜபக்ச அரசு பதவி விலக வேண்டும் என்பதைக் கண்டித்து இன்று இலங்கை நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
கண்ணீர்ப் புகைக் குண்டு
அதேபோல மறுபுறம் அங்குள்ள மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களில் சிலர் நாடாளுமன்ற்தில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டது.
அவசர நிலை
இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சி அளித்தது. இலங்கை நாட்டில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் சூழலில், அங்கு நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவசர நிலை அமலுக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் வர்த்தமானி எனப்படும் கெஜட் வெளியாகி உள்ளது.