இலங்கையில் பழைய இரும்புக்குப் போடப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் - அதிர்ச்சித் தகவல்
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்படும் தமிழக மீனவர்களின் படகுகள் அங்குள்ள இரும்புக் கடைகளுக்கு விற்பனைச் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வருகிறது. அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் பின்னர் சொந்த ஊர் திரும்பும் போது, இலங்கை அரசால் அவர்களுடைய படகுகள் திருப்பித் தரப்படுவதில்லை.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக தமிழக மீனவர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவ்வாறு கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழைய இரும்புப் பொருட்களை விற்கும் கடைக்கு விற்று விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சேதமடையும் படகுகள்...
தமிழக மீனவர்களின் படகுகள் யாழ்ப்பாணம், ஊர்காவல்துறை துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் கடும் சேதத்தை சந்திக்கின்றன.
ஏலம்...
இன்னும் சில படகுகள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு சேதமான படகுகள் இரும்பு வியாபாரிகளுக்கு ஏலம் மூலமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
8 லட்ச ரூபாய்க்கு...
சமீபத்தில் இவ்வாறு நடந்த ஏலம் ஒன்றில், ஊர்காவல்துறை துறைமுகத்தில் மூழ்கி கிடக்கும் அத்தனை படகுகளையும் சுமார் 8 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு வியாபாரி ஏலம் எடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ச்சி...
இப்போது இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் தங்களது படகுகள் திரும்பிக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வரும் தமிழக மீனவர்களுக்கு இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.