இலங்கையில் 13வது திருத்த சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை கோரி மோடிக்கு தமிழர் கட்சி கடிதம்
கொழும்பு: 13வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முற்போக்கு தமிழ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த், இந்திய பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது,
"வரலாற்று ரீதியாக இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடுகளாக விளங்கி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்னரும் இந்தியாவின் நல்லாட்சி இலங்கை தமிழ் மக்களின் நல்வாழ்விற்கு பல வழிகளிலும் பக்க துணையாக இருந்து வருகின்றது.
இலங்கையின் வட பகுதியில் வாழும் தமிழ் மீனவ மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் சட்ட விரோதமான மீன்பிடிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் 30 வருடங்களுக்கு மேற்பட்ட முரண்பட்ட சூழ்நிலைக்குப் பின்னர் எமது தமிழ் மீனவர்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அவ்வேளையில் இவ்வாறான இந்திய சகோதரர்களின் அத்துமீறிய சட்ட விரோத மீன்பிடியானது நொந்துபோன எமது தமிழ் மக்களுக்கு மேலும் வலியை ஏற்படுத்துகின்றது.
கடந்த இரண்டு வருட காலப்பகுதிகளில் கிட்டத்தட்ட 132 மீனவப் படகுகளும் 588-க்கும் மேலான மீனவர்களும் இலங்கை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு 15 தடவைக்கு மேலாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எனவே இவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க எமது மீனவர்களுக்கும் தென் இந்திய மீனவர்களுக்குமான நட்புக்கு பாதகமான ஓர் நிலையினை தோற்றுவித்துள்ளது.
ஆகவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை தமிழ் மக்களின் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், இலங்கை - இந்திய கடலோர எல்லைப் பாதுகாப்பினை பலப்படுத்தி இவ்வாறான சட்ட விரோத மீன்பிடிப்பினை நிறுத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்க்கையை செழிப்படைய செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.