கடற்படையிலிருந்து ராஜபக்சே மகன் யோஷித ராஜினாமா செய்ய அனுமதி மறுப்பு!
கொழும்பு: முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே, கடற்படையிலிருந்து ராஜினாமா செய்ய இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இது குறித்து இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறுகையில், அதிபர் தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9-ந் தேதி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே, கடற்படை சேவையிலிருந்து ராஜினாமா செய்வதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவுக்கு கடிதம் அனுப்பினார்.
ஆனால் கடற்படைத் தளபதி அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இந்நிலையில், யோஷித ராஜபக்சே கடற்படையில் இணைந்து கொண்ட முறை, வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சிகளை பெற்ற முறை, கடமையில் இருந்த போது அரசியல் செய்த முறை ஆகியவை தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி பிரதிநிதிகள் சிலர் நேற்று பாதுகாப்பு ஆணையாளருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் யோஷித ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.