மாவீரர் நாள் நினைவு சின்னங்களை தகர்த்த இலங்கை ராணுவம்- பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கில் மாவீரர் நாள் நினைவு சின்னங்களை இலங்கை கடற்படையினர் தகர்த்துள்ளனர்; மேலும் பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கொடூரமாக இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்
தமிழீழம் தனிநாடு கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 1989-ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. தனிநாடு கோரும் யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாவீரர் நாள்
2009-ம் ஆண்டு இலங்கை அரசுடனான இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை மவுனிக்கச் செய்தனர். அதன்பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஈழத்திலும் தமிழகம் உட்பட உலக நாடுகளின் பல பகுதிகளிலும் மாவீரர் நாள் ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
தடையை மீறி மாவீரர் நாள்
இலங்கையின் தமிழர் தாயக பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் கடந்த நவம்பர் 27-ந் தேதி உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்வுகளை முடக்கும் வகையில் இலங்கை ராணுவமும் போலீசாரும் தமிழர்கள் மீது கெடுபிடிகளை கட்டவிழ்த்துவிட்டனர். சில இடங்களில் மாவீரர் நினைவு சின்னங்களை இலங்கை ராணுவம் தகர்த்தது. பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கைது செய்தது. இத்தனை தடைகளையும் மீறி தமிழர்கள் மாவீரர் நாளை கடைபிடித்தனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதல்
மேலும் நவம்பர் 27-ந் தேதியன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் நாள் குறித்த செய்தி சேகரிக்க சென்று விட்டு பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை அவர் படம் பிடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட இலங்கை ராணுவத்தினர் அவரை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் விஸ்வலிங்கம் மிக மோசமாக படுகாயமடைந்தார். இலங்கை ராணுவத்தின் இத்தாக்குதலுக்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
இதனிடையே பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் தாக்கப்பட்டது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் குழு விசாரணையை தொடங்கி உள்ளது. பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய முல்லைத் தீவு 59வது படைப் பிரிவு, முல்லைத் தீவு போலீசார் டிசம்பர் 3-ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இலங்கை ராணுவத்தின் இத்தாக்குதல்களுக்கு தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.