சிங்கங்கள் எஸ்கேப் ஆகிடுச்சே.. பத்தே செகண்டில் மொத்த உயிரியல் பூங்காவும் காலி - அலறிய ஆஸ்திரேலியா
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்கள் திடீரென காணாமல் போனதாக அறிவிப்பு வெளியானதால் பயந்து போன மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்த நிலையில், சிங்கங்கள் காணாமல் போனதாக அறிவிப்பு வந்ததுமே, பத்தே செகண்டில் மொத்த மக்களும் உயிரியல் பூங்காவை விட்டு வெளியேறியதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கங்கள் தப்பித்துச் செல்லும் அளவுக்கு அஜாக்கிரதையாக இருந்ததாக அங்குள்ள சில ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து உயிரியல் பூங்கா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்போர்டில் பரபரப்பு.. கூண்டில் இருந்து எஸ்கேப் ஆன சிங்கங்கள்.. அடுத்து நடந்தது என்ன
பிரம்மாண்ட உயிரியல் பூங்கா..
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 'டரோங்கோ' உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. மிகப்பெரிய உயிரியல் பூங்காவான இது, உலக அளவில் புகழ்பெற்றது ஆகும். அனைத்து வன விலங்குகளும் சுதந்திரமாக நடமாடும் வகையில் 'சஃபாரி' ஸ்டைல் உயிரியல் பூங்காவாக இது விளங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த உயிரியல் பூங்காவுக்கு நிச்சயம் செல்வார்கள். ஆசிய சிங்கங்கள், ஆப்பிரிக்கா சிங்கங்கள், புலிகள், யானை, முதலை என ஏராளமான விலங்குகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தப்பிய சிங்கங்கள்..
இந்நிலையில், நேற்று இந்த பூங்காவுக்கு வழக்கம் போல நூற்றுக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கு ஹாயாக விலங்குகளை சுற்றிப் பார்த்துள்ளனர். அந்த சமயத்தில், அங்கிருந்த ஊழியர்கள் வன விலங்குகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிங்கங்கள் இருக்கும் பகுதியில் 2 ஆண் சிங்கங்களும், 3 பெண் சிங்கங்களும் காணாமல் போனது தெரியவந்தது.
வெளியான 'பகீர்' அறிவிப்பு
இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள், இதுகுறித்து உயிரியில் பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இத்தனை மக்கள் நடமாடும் இடத்தில், சிங்கங்கள் தப்பித்தால் எவ்வளவு பெரிய ஆபத்து உருவாகும் என எண்ணி பயந்த உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் இதனை அறிவித்து விடுவது என முடிவு செய்தனர். அதன்படி, உயிரியல் பூங்காவில் பல இடங்களில் பொருத்தப்பட்ட ஒலிப்பெருக்கிகளில் அறிவிப்பு வெளியாகியது. அதில், "எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.. யாரும் இந்த அறிவிப்பை கேட்டு பீதியடைய வேண்டாம். 5 சிங்கங்கள் தப்பித்துவிட்டன. அவை எங்கே இருக்கின்றன என்பது தெரியவில்லை. எனவே அனைவரும் உடனடியாக வெளியேறுவது நல்லது" என அறிவிக்கப்பட்டது.
அலறியடித்து ஓடிய மக்கள்.. கடைசியில்
அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். மக்கள் தங்கள் உடைமைகளையும், குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களையும் தூக்கிக் கொண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறியடித்துக் கொண்டு ஓடினர். அவ்வளவு பெரிய பூங்காவில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் 10 நொடிகளுக்குள்ளாகவே அங்கிருந்து வெளியேறினர். இதனால் சில நொடிகளுக்கு முன்பு ஆராவாரமாக இருந்த உயிரியல் பூங்கா அப்படியே மயான அமைதியாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்கள் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது தப்பிச் சென்ற 5 சிங்கங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் கூட பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும், சிங்கங்கள் தப்பிக்கும் அளவுக்கு அஜாக்கிரதையாக செயல்பட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.