ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்.. ‘மர்மம்’.. இன்னும் 63 ஆண்டுகளுக்கு யாரும் படிக்க முடியாது.. ஏன்?
சிட்னி : மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிய கடிதம் ஒன்று சிட்னியில் உள்ள கட்டடம் ஒன்றில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் கடந்த 1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது எழுதிக் கொடுத்த அந்தக் கடிதத்தை, 2085-ஆம் ஆண்டில்தான் பிரித்துப் படிக்க வேண்டும் என அவரே கைப்பட எழுதி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தின் நீண்டகால அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி மரணமடைந்த நிலையிலும், அவர் எழுதிய கடிதத்தில் இருக்கும் மர்மத்தை அறிய இன்னும் 63 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
எலிசபெத் ராணி ஆகும்போது எங்கு இருந்தார் தெரியுமா..? 'மரத்தில் ஏறும்போது இளவரசி.. இறங்கும்போது அரசி"!
ராணி எலிசபெத்
பிரிட்டன் அரசியான இரண்டாம் எலிசபெத் கடந்த செப்., 8ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 96. உடல்நலக் குறைவு காரணமாக ஸ்காட்லாந்து பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத், சமீப நாட்களாக மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தாக சொல்லப்பட்டது. இதனால் அவருக்கு நெருக்கமான பலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 8ஆம் தேதி இரவு அவர் காலமாகி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நீண்ட கால அரசி
பிரிட்டன் வரலாற்றில் மிக அதிக காலம் ராணியாக இருந்தவர் இரண்டாம் எலிசபெத். 1952ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் மகாராணியாக இருந்து வந்தார் இரண்டாம் எலிசபெத். அவர் இறக்கும் வரை சரியாக 70 ஆண்டுகள் 214 நாட்கள் இங்கிலாந்தின் ராணியாக இருந்திருக்கிறார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் பல்மோரல் இல்லத்தில் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது. ராணி எலிசபெத்தின் உடல் வரும் 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்ய தகவல்
இந்நிலையில், ராணி எலிசபெத் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராணி எலிசபெத் எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ராணி விக்டோரியா கட்டடத்தில் ரகசியமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை அடுத்த 63 ஆண்டுகளுக்கு பிரிக்கக் கூடாது என்ற உத்தரவும் கடைபிடிக்கப்படுகிறது. கடிதத்தில் எழுதியுள்ள விஷயங்களை பொதுமக்களுக்கு எப்போது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து அதில் ராணி எலிசபெத் தெரிவித்துள்ளார்.
ரகசிய கடிதம்
சிட்னியில் உள்ள விக்டோரியா ராணி கட்டடத்தில் அமைந்துள்ள சதுர வடிவ பெட்டிக்குள் ராணி எலிசபெத் எழுதிய இந்தக் கடிதம் வைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியின் மேயருக்கு ராணி எலிசபெத் தன் கைப்பட எழுதிய அந்தக் கடித உறையில், 2085 ஆம் ஆண்டில் பொருத்தமான தினத்தில் இந்த கடித உறையை பிரித்து சிட்னி நகர வாசிகளுக்கு தனது செய்தியை வழங்குமாறு எலிசபெத் கூறியுள்ளார்.
இன்னும் நீடிக்கும் மர்மம்
விக்டோரியா மகாராணியின் வைரவிழாவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 1898ஆம் ஆண்டில் பெட்டகம் வைக்கப்பட்டுள்ள கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த கட்டடம் 1986ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. அப்போதுதான் ராணி எலிசபெத்தின் கடிதம் அங்கு வைக்கப்பட்டது. ராணி எலிசபெத்தின் உத்தரவு பின்பற்றப்படுவதால், அடுத்த 63 ஆண்டுகளுக்கு அந்த கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருக்கும்.
யாருக்குமே தெரியாது
மறைந்த ராணி எலிசபெத், ஆஸ்திரேலியாவின் அரசுத் தலைவியாக நீண்டகாலம் இருந்துள்ளார் என்பதால் அந்தக் கடிதத்தில் அப்படி என்ன இருக்கும் என்பதை அறிய சிட்னி மக்கள் ஆவலாக இருக்கும் நிலையில் அவர்கள் இன்னும் 63 ஆண்டுகள் அதற்காக காத்திருக்க வேண்டும். தனது கையெழுத்தில் ராணி எலிசபெத் எழுதிய அந்த கடிதத்தில் என்ன உள்ளது என்பது அவரது தனிப்பட்ட ஊழியர்கள் குழுவுக்குக்கூட தெரியாது எனக் கூறப்படுகிறது.