பெப்சி குடித்து சிறுமி பலி எதிரொலி: சென்னையில் 1500 பாட்டில்கள் பறிமுதல்
சென்னை: கடலூரில் பெப்சி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அதே நேரத்தில் தயாரிக்கப்பட்ட பெப்சி பாட்டில்களையும் கைப்பற்ற உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 5 குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். வடபழனி, தண்டையார்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள வியாபார கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி தயாரிக்கப்ப்ட்டு கிபி46 லி4 என்ற எண்ணை கொண்ட 162 பெப்சி பாட்டில்கள் 136 சில்லறை வியாபார கடைகளில் இருந்து பறிமுதல் செய்தனர்.
மேலும் 22 வினியோகஸ்தர்களிடம் இருந்து அதே பிரிவில் தயாரிக்கப்பட்ட 1536 பாட்டில்கள் கண்டறியப்பட்டன. அவற்றை விற்கக் கூடாது எனவும், பெப்சி நிறுவனத்திடம் திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். பெப்சி பாட்டில் சோதனை சென்னையில் தொடரும் என்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட குளிர்பான மாதிரியை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.