கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளும் ரத்து
கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது, அரசு குறித்தும், ஜெயலலிதா குறித்தும் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் கூறப்பட்டது.
13 அவதூறு வழக்குகள்
இதனால் அன்றைய அதிமுக அரசு கருணாநிதி மீது 2012-ம் ஆண்டு 7 வழக்குகளையும், 2013-ம் ஆண்டு 5 வழக்குகளையும், 2015-ம் ஆண்டு ஒரு வழக்கும் என மொத்தமாக 13 அவதூறு வழக்குகளை தொடுத்தது. இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
செசன்சு கோர்ட்
அந்த வழக்குகள் எல்லாமே நிலுவையில் இருந்து வந்தன. இந்நிலையில், கருணாநிதி மறைவினை அடுத்து, அந்த 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க. வக்கீல் குமரேசன் அதே சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அனைத்து வழக்குகளும் ரத்து
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. மனுவை ஏற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி மறைந்த கருணாநிதியின் மீதான 13 அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து கருணாநிதி மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் நீங்கியுள்ளன.
மறைந்த வழக்குகள்
ஜெயலலிதா மறைந்த பிறகும் தீர்ப்புக்குள்ளானவர். ஆனால் கருணாநிதி மறைந்ததும் அவரோடு சேர்ந்து அவர் மீதான வழக்குகளும் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.