சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஆட்சியை காப்பாற்ற முயற்சி.. கொதிக்கும் மாஜி சபா ஆவுடையப்பன்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை சட்டப்படி செல்லாது என முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சபாநாயகர் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தவறானது. சட்ட விதிகளுக்கு முறனானது. 18 எம்எல்ஏக்களும் முதல்வரை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதை குற்றச்சாட்டாக கருதி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த கட்சியில், எந்த சின்னத்தில போட்டியிட்டனரோ அதே கட்சியில் தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சபாநாயகர் கட்சி மாறியுள்ளதாக கூறி அறிவித்திருப்பது சட்டத்திற்கும், நியாத்திற்கும் புறம்பானது. இந்த விவகாரத்தில் கொறடா உத்தரவை மீறி எம்எல்ஏக்கள் நடந்துள்ளனர் என்று கூற முடியாது.
இது கட்சி தாவலே இல்லை. அப்படி இருக்கையில் கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுத்ததில் அர்த்தமே இல்லை. இவ்வாறு செய்வது சட்டப்படி செல்லாது.
கர்நாடகாவில் இதுபோல் நடந்து எம்எல்ஏக்கள் கோர்ட் சென்ற போது இது உட்கட்சி விவகாரம், சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று கூறி கைவிரித்தது. இதனால் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
அப்போது அவர்களுக்கு நீதி கிடைக்கும். எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற அச்சத்தில் சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாவே கருத வேண்டியது உள்ளது. சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து ஆட்சியை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications