பிச்சையெடுக்க 185 குழந்தைகள் கடத்தல்...விரட்டிப் பிடித்த போலீசார்- ஹைகோர்ட்டில் தமிழக அரசு
தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் பிச்சையெடுக்க 185 குழந்தைகள் கடத்தப்பட்டனர் என்றும் அவர்களை தீவிரமாகத் தேடி தமிழக போலீசார் மீட்டனர் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சமூக விரோதிகள் குழந்தைக்கடத்தல் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும் அதைத் தடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் நடந்த வழக்கில்,இதுவரை 185 குழந்தைகள் கடத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், எக்ஸ்னோரா நிர்மல் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், '2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 10 மற்றும் 11 மாத குழந்தைகள் அடுத்தடுத்து மர்மநபர்களால் கடத்தப்பட்டன.
இதுபோல, சென்னையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் பல கைக்குழந்தைகள் அடிக்கடி கடத்தப்படுகின்றனர்.இந்த குழந்தைகளை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு,' வசதி படைத்தவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டால் உடனே கண்டுபிடிக்கும் போலீசாரால், ஏழைகளின் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாதா? என்று கடுமையாக கண்டித்தது.

தனி போலீஸ் படை
சமூக விரோதிகளால், கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குழந்தைகள் கடத்தல் வழக்கை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனி போலீஸ் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக போலீசுக்கு உத்தரவும் வழங்கி இருந்தனர்.

போலீஸ் அளித்த அறிக்கை
குழந்தைக் கடத்தல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கே.சங்கர் ஆஜராகி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதிரடி சோதனை
அதில், நீதிமன்ற உத்தரவின்படி, ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் கடந்த ஏப்ரல் 20ம் தேதி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 21ம் தேதி 47 தனிப்பிரிவு போலீசார் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

185 குழந்தைகள் மீட்பு
சோதனையில், 48 பெண் குழந்தைகள், 46 ஆண் குழந்தைகள் என மொத்தம் 94 குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகளை வைத்திருந்த 70 பெண்கள், 9 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 21 குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்ற குழந்தைகள் 12 காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கிரிமினல்கள் சிறையிலடைப்பு
இதுகுறித்து கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை சிறையில் அடைத்துவிட்டோம். இதுபோல குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கோவையிலும் குழந்தைக் கடத்தல்
இதேபோல, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கோவை மாநகரில் பிச்சை எடுக்கவும், கூலி வேலை செய்யவும் பயன்படுத்தப்பட்ட 91 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில், சிலரை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்ற குழந்தைகளை காப்பகத்தில் வைத்துள்ளோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசுக்கு பாராட்டு
குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடமும் ஒப்படைத்தல், காப்பகத்தில் வைத்து பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் கரன்சின்கா, கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications