'அம்மா உணவக' வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 சிசிடிவி கேமராக்கள் திருட்டு!
சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
சென்னையின் பல பகுதிகளில் மாநகராட்சியின் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. அதேபோன்ற ஒரு உணவகம், வட சென்னையின் காசிமேடு பகுதியில் உள்ளது.
இங்குள்ள பவர்குப்பம் பள்ளம் பகுதியில் இந்த உணவகம் உள்ளது. இங்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இங்கு கற்பகம் என்பவர் சூப்பர்வைசராக உள்ளார். 25 பேர் பணியாற்றுகிறார்கள்.
இன்று காலை உணவகத்தை திறந்து ஊழியர்கள் பணியில் இறங்கினர். அப்போதுதான் அங்கிருந்த இரண்டு ரகசியக் கேமராக்களும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்து அனைவரும் அதிர்ந்தனர்.
இதுகுறித்து கற்பகம், காசிமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா உணவகம் ஒன்றில் திருட்டு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் போலீஸார் விறுவிறுப்புடன் திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.