கோயம்பேடு சந்தையில் அடுத்தடுத்து விபத்து... 2 பேர் பலி
சென்னை: கோயம்பேடு வணிக சந்தையில் சரக்குகளை இறக்கும் போது லாரி மோதி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தை கண்டித்து அங்கு கடை உரிமையாளர்கள், சந்தை நிர்வாகிகள், வணிகர்கள் குவிந்தனர். விபத்தை கண்டித்தும், உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் சரக்கு இறக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
உயிரிழந்த தொழிலாளியின் பெயர் பெரியசாமி(50) பெரம்பலூர் அருகே உள்ள காடூர் கிராமத்தை சேர்ந்த இவர், சென்னையில் தங்கி கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகளில் வந்த காய்கறி மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.
‘ஜெ' காம்ப்ளக்ஸ் அருகே பெரியசாமி மூட்டைகளை இறக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அருகில் நின்ற லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கினார். இதில் பெரியசாமி மீது லாரியின் பின்பகுதி மோதி அருகில் நின்ற மற்றொரு லாரியுடன் நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள் அங்கு திரண்டனர். உடனே தப்பியோடிய லாரி டிரைவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தொழிலாளி பலியானதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் லாரி, வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களை வெளியே செல்லவும், உள்ளே வரவும் அவர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் மார்க்கெட் வளாகத்திலேயே அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு கடைகளால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விரைந்து வந்து தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இந்த போராட்டத்தால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்த வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் அவதி அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரியை ஓட்டிய திருவண்ணாமலை செஞ்சியை சேர்ந்த குபேந்திரனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆம்புலன்ஸ் மோதி விபத்து
இதற்கிடையே பலியான பெரியசாமி உடலை எடுப்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை ஓட்டி வந்தார். கோயம்பேடு மேம்பாலத்தில் வந்தபோது வாகனங்கள் எதிரே வரதாதால் விதி முறையை மீறி எதிர் திசையில் சென்றார். அந்த நேரத்தில் காய்கறி வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய கொரட்டூர் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (40) மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்தனர். கைதான டிரைவர் சேத்துப்பட்டு மங்களாபுரத்தைச் சேர்ந்த கோடீஸ்வரன் ஆவார். இதனையடுத்து வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பெரியசாமியின் உடல் எடுத்து செல்லப்பட்டது. இன்று அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் கோயம்பேடு சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் உறவினர்கள் அங்கு குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications