குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்.. 2 பெண்கள் பலி- சோகம்
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
Recommended Video
தென்மேற்கு பருவமழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி உள்ளது. குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களிலும் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வரும் மக்கள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர்.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் , தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாலை கனமழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இது இரவு 7 மணியளவில் வெள்ளப்பெருக்காக மாறியது. குறிப்பாக மெயின் அருவியில் விழுந்த தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அருவியில் குளித்தவர்களை போலீசார் வெளியேற கூறினர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஐவர்
இந்த வேளையில் எதிர்பாராத விதமாக 5 பேர் வெள்ளத்தில் சிக்கினர். 4 பெண்கள் உள்பட 5 பேர் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியமடைந்த சுற்றுலா பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து போலீசார் உள்பட அங்கு இருந்தவர்கள் அவசரமாக செயல்பட்டு 2 பெண்கள் உள்பட 3 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் 2 பேரை உடனடியாக மீட்க முடியவில்லை.
சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் பலி
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் இணைந்து 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பெண்கள் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் இறந்தவர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த விஜயகுமார் மனைவி மல்லிகா (வயது 46), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜாராம் மனைவி கலாவதி (55) என்பது தெரியவந்தது. இதுபற்றி குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீவிர கண்காணிப்பு
இதையடுத்து குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் வெள்ளம் ஏற்படலாம் எனும் நிலை வந்தால் முன்கூட்டியே அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகபளுக்கு டை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது அருவிகளில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.